(க.சிவலிங்கமூர்த்தி)
அரசாங்கம் தற்போது எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சிப்பதுடன், அரசியல் தந்திரோபாயங்களின் அடிப்படையில் தனிப்பட்ட நபர்களை இலக்கு வைத்து பதவிக்காலத்தை நீடிப்பதன் மூலம் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை அழிக்க முற்படுமானால் அதற்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்துச் செயல்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இன்று அரசாங்கத்துக்கு நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்ற அதிகாரத்தின் பலம் உள்ளது. ஆனால், நீதிமன்றத்தின் சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில் இந்நாட்டின் கடந்த காலத்தில் சில சிறிய சம்பவங்கள் இடம்பெற்ற போது, நீதிமன்றத்தில் தலையிடச் சென்றதால் அந்த அரசாங்கங்களின் தலைவர்கள் அனைவரும் பதவிகளை இழந்து வெளியேறினர். ஆனால், இன்று அரசாங்கத்தின் செயல்பாடுகளால் நீதிமன்றத்தின் சுதந்திரம் தொடர்பிலும் பிரச்சினை எழுந்துள்ளதை நாம் காண்கின்றோம்.
பதவிக் காலத்தை நீடிக்கும் போது, தனிப்பட்ட நபர்களை இலக்கு வைத்து பதவிக் காலம் நீடிக்கப்படுமானால் நாம் அதற்கு எதிரானவர்கள். அரசாங்க சேவையில் அவ்வாறு பதவிக் காலத்தை நீடிப்பது என்பது நீதிமன்றத்துக்கு மாத்திரம் உரியது அல்ல. இந்நாட்டில் நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. அதேபோல் சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகளுக்கும் தட்டுப்பாடு உள்ளது.
அரசியல் தந்திரோபாயங்களின் அடிப்படையில், ஒரு தனிநபரை இலக்கு வைத்து அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கைக் கொண்டுவரவும், நீதிமன்றத்தின் சுதந்திரத்தை அழிக்கவும் முற்படுமானால், நாம் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அதற்கு எதிராகச் செயல்படுவோம். ஏதிர்வரும் 23 ஆம் திகதி அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றையும் நாம் நடத்தவுள்ளோம் என்றார்.
