(க.சிவலிங்கமூர்த்தி)
மத்திய மாகாண மற்றும் வடமேல் மாகாணங்களின் தவணைப் பரீட்சை முறைகேடுகள் மற்றும் ஆசிரியர் இடமாற்றக் கொள்கைகளில் நிலவும் முறையற்ற தன்மைகளுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் காரியாலயத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மத்திய மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற சாதாரணதர தமிழ் மொழி மூல தவணைப் பரீட்சை வினாத்தாளானது, 2019 ஆம் ஆண்டு வடக்கு மாகாண வினாத்தாளின் முழுமையான நகலாகும். முதலாம் வினாத்தாளின் 24 ஆம் வினாவில் இருந்து, 2 மற்றும் 3 ஆம் வினாத்தாள்கள் முழுமையாக அவ்வாறே வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து மாகாண கல்விப் பணிப்பாளருக்குப் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
பொதுப்பணம் பெருமளவில் செலவிடப்படும் பரீட்சைகளில் அதிகாரிகள் இந்தளவு பொறுப்பற்ற முறையில் செயற்படுவது ஒட்டுமொத்த மோசடியாகும். எனவே, இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அதேபோன்று, வடமேல் மாகாணத்தில் அச்சுக்கூடம் உரிய நேரத்தில் வினாத்தாள்களை வழங்காததால், 3 நாட்கள் நடைபெற்ற பரீட்சைகள் எஞ்சிய 4 நாட்களுக்குத் திடீரென நிறுத்தப்பட்டன. பரீட்சைக்குத் தயாராகியிருந்த மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பரீட்சைகளில் ஏற்படும் இவ்வாறான முறைகேடுகள் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கிய விளக்கங்கள் எமக்குத் திருப்தியளிக்கவில்லை. அதிகாரிகள் வெறும் ஊடகச் சந்திப்புகளை நடத்துவதோடு நிறுத்தாமல், மறுபடி இத்தவறுகள் நடக்காத வண்ணம் தீர்வுகளை வழங்க வேண்டும்.
கல்வி அமைச்சு தற்போது 2027 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றங்களுக்கு 8 வருடங்களுக்கும் அதிகமான சேவைக்காலத்தைக் கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. ஆனால், 2026 ஆம் ஆண்டுக்குரிய இடமாற்றங்களின் கீழ், 9 வருடங்களுக்கும் மேலாகப் பிரதான பாடசாலைகளில் பணியாற்றி இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களில் 315 க்கும் அதிகமானோர் அதிபர்களின் சுய தேவைகளுக்காக இன்னும் விடுவிக்கப்படாமல் தங்கியுள்ளனர்.
இதனால் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கல்விச் செயலாளரின் உத்தரவை மீறி ஒரு குழுவினர் செல்லாமல் இருக்கிறார்கள் என்றால், கல்விச் செயலாளர் எடுக்கும் நடவடிக்கை என்ன? 2017 ஆம் ஆண்டில் 10 வருடங்களாக இருந்த சேவைக்காலம், பின்னர் 9 வருடங்களாகக் குறைக்கப்பட்டு, தற்போது 8 வருடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இடமாற்ற உத்தரவு கிடைத்தும் செல்லாமல் இருப்பவர்கள் மீது அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதைப் தெளிவுபடுத்த வேண்டும்.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் இணையவழி மூலம் கோரப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றங்களில் பல குறைபாடுகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, இடமாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்ட பல ஆசிரியர்களுக்குப் பதிலீட்டாளர்கள் இல்லாததால் அவர்களின் இடமாற்றங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
வெளி மாகாணங்களில் பல வருடங்களாகச் சேவை செய்யும் ஆசிரியர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஆசிரியர்கள் மனநிறைவுடன் பணியாற்ற வேண்டுமாயின், அவர்களின் இடமாற்றங்கள் வெளிப்படையானதாகவும் முறையானதாகவும் அமைய வேண்டும். சில பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் உபரி நிலையைச் சீர்செய்து, பற்றாக்குறை உள்ள இடங்களுக்குப் போதிய ஆசிரியர்களை வழங்க அரசாங்கம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
