முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்டுவான் பகுதியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க அவர்களால் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீடுகளுக்கும் ரூபா 50 இலட்சம் பெறுமதியான புதிய வீடுகள் அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வீட்டுத்திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
