(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஒட்டுமொத்த மக்களும் சர்வதேச அமைப்புக்களும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. நீதித்துறையை அரசியல்மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். இல்லையேல் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற பொதுமனுக்கள் பற்றிய குழுவின் நடவடிக்கைமுறை மற்றும் செயலாற்றுகை பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் நீதித்துறையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது. இதன் ஒரு அங்கமாகவே பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கு பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறது.
நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் முயற்சிக்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்புக்கள் வெளியாகியுள்ள நிலையில் அரசாங்கம் அதனை கருத்திற்கொள்ளாமல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும்போது நீதித்துறையை பாதுகாக்க வேண்டும், சுயாதீனத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று உரத்துக் குறிப்பிட்டார். ஆனால் தற்போது அதற்கு எதிர்மறையாக செயற்படுகிறார்.
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை அப்போதைய அரசாங்கம் முறையற்ற வகையில் பதவி நீக்கியது. இதற்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்பு வெளிப்பட்டது. இந்த முறையற்ற செயற்பாடுதான் அந்த அரசாங்கம் தோல்வியடைவதற்கு பிரதான காரணியாக அமைந்தது. இந்த அரசாங்கமும் அவ்வாறான வழியில்தான் தற்போது பயணிக்கிறது. பெறுபேறு நிச்சயம் கிடைக்கும் என்றார்.
