செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து மண்டையோடு இல்லாத என்புக்கூடுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 39ஆவது நாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை, அருகருகே இரு சிறுவர்களின் என்புக்கூடு உட்பட 13 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. சில என்புகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் சில என்புக்கூடுகளுக்கு மண்டையோடுகள் இல்லாத நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை குவியலாக காணப்பட்ட என்பு குவியலுக்குள் மண்டையோடுகளும் காணப்படுவதனால், ஆய்வுகளின் பின்னரே அவை தொடர்பில் மேலதிகமான தகவல் கூற முடியும் என சட்டத்தரணி ஞா.ரனிதா தெரிவித்தார்.
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 03 சிறுவர்களின் என்புக்கூடுகள் உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 93 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 467 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 444 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
