சரண்யா சேகரம்
"பொறியியல் என்பது ஆண்களுக்கான துறை" என்ற சமூகக் கருத்தை உடைத்து, இலங்கையின் முதல் பெண் சிவில் பொறியியலாளராக வரலாறு படைத்தவர் கலாநிதி பிரேமலா சிவப்பிரகாசப்பிள்ளை சிவசேகரம். தனது அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் திறமையின் மூலம் அவர் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றதோடு, பெண்களுக்கான புதிய பாதையையும் திறந்து வைத்தார்.
1960 ஆம் ஆண்டு அப்போதைய சிலோன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் இணைந்த முதல் பெண் மாணவியாக கலாநிதி பிரேமலா வரலாற்றில் இடம்பிடித்தார். பின்னர் 1964 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பெண் சிவில் பொறியியலாளராக பட்டம் பெற்றார். தனது சாதனைகள் குறித்து அவர் பெருமிதம் காட்டுவதற்குப் பதிலாக, "எனக்கு பிடித்த துறையை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டேன். அதில் முழுமையாக ஈடுபட்டிருந்தேன். நான் செய்த வேலையை மிகவும் நேசித்தேன்" என்று எளிமையாகக் கூறுகிறார்.
போர்காலத்தில் தொடங்கிய வாழ்க்கைப் பயணம்
1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய குண்டுவீச்சு காரணமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அவரது குடும்பம் இடம்பெயர்ந்திருந்தது. அப்போது யாழ்ப்பாணத்தில் அவர் பிறந்தார். பின்னர் குடும்பம் மீண்டும் கொழும்புக்கு திரும்பியதையடுத்து, CMS Ladies' College பாடசாலையில் கல்வி கற்றார்.
அவரது தந்தையும் புகழ்பெற்ற பொறியியலாளராக இருந்ததால், மகளின் கனவுக்கு உறுதுணையாக இருந்தார். ஆனால் சமூகத்தில் இருந்து எதிர்ப்புகளும் குறைவாக இருக்கவில்லை. "பொறியியல் பெண்களுக்கு ஏற்றதல்ல", "60 ஆண் மாணவர்களுடன் படித்தால் பெண்மையின் தன்மை குறைந்து விடும்", "கட்டிடக் கலை படிப்பதே சிறந்தது" போன்ற விமர்சனங்கள் எழுந்தபோதும், அவரது குடும்பம் உறுதியாக அவருக்கு ஆதரவாக நின்றது.
ஒக்ஸ்போர்டில் முனைவர் பட்டம்
1965 ஆம் ஆண்டு இலங்கை அரசின் புலமைப்பரிசில் பெற்று இங்கிலாந்தின் Somerville College, Oxford கல்லூரியில் கட்டமைப்பு பொறியியலில் (Structural Engineering) முனைவர் பட்டம் பெற்றார்.
திருமணத்திற்கு முன்பே தனது கல்வியை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்று அவரது தந்தை வலியுறுத்தினார். திறமையான பெண்கள் திருமணத்திற்குப் பிறகு கல்வியை இடைநிறுத்திய அனுபவங்களை பார்த்திருந்ததால், மகளின் எதிர்காலத்தை அவர் பாதுகாத்தார்.
ஏனைய பெண்களுக்கு வழிகாட்டிய தலைவர்
1978 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பெண் Chief Structural Engineer ஆக நியமிக்கப்பட்டார். அவர் பணியாற்றிய காலத்தில், ஆண்கள் மட்டுமே செய்யக்கூடியதாக கருதப்பட்ட பணிகளையும் தயக்கமின்றி மேற்கொண்டார்.
"உயரமான ஏணியில் ஏற வேண்டியிருந்தாலும் நான் ஒருபோதும் மறுக்கவில்லை. இல்லையெனில் பெண்கள் பொறியியல் துறைக்கு பொருத்தமற்றவர்கள் என்று கூறியிருப்பார்கள்" என்று அவர் நினைவுகூர்கிறார்.
குடும்பமும் பணியும் – இரண்டையும் சமநிலைப்படுத்தியவர்
பொறியியல் துறையில் உயர்ந்த பதவிகளை வகித்ததோடு, தாயாகவும் தனது பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றினார். குழந்தை பிறந்த பிறகு சில மாதங்கள் வீட்டில் இருக்க விரும்பியிருந்தாலும், அக்கால அரசுப் பணிச் சட்டங்கள் காரணமாக உடனடியாக பணியில் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். அந்தக் காலத்தில் தனது பெற்றோர் வழங்கிய ஆதரவை அவர் நன்றியுடன் நினைவுகூர்கிறார்.
பெண்களின் பங்கேற்பு அவசியம்
எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்திலும் ஆரம்ப கட்டத்திலிருந்தே பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கலாநிதி பிரேமலா வலியுறுத்துகிறார். " வீதிகள், பொதுப் போக்குவரத்து, மருந்துகள், சுகாதாரம் என அனைத்தையும் பெண்கள் வேறுபட்ட கோணத்தில் பார்க்கிறார்கள். எனவே அனைத்து முடிவெடுக்கும் நிலைகளிலும் பெண்கள் இருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
பெண்களின் பார்வை கொள்கை வகுப்பிலும், அரச நிர்வாகத்திலும், பொறியியல் திட்டங்களிலும் இடம்பெறுவது நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
செயற்கை நுண்ணறிவு குறித்து எச்சரிக்கை
தொழில்நுட்ப வளர்ச்சி மனிதகுலத்திற்கு பல வாய்ப்புகளை வழங்கியுள்ள போதிலும், செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து அவர் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் எனக் கருதுகிறார்.
"அதன் கட்டுப்பாட்டை நாம் உறுதியாக கையில் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் சில அனுபவங்களையும் சவால்களையும் சந்தித்த பிறகே அதை எவ்வாறு சரியாக கையாள வேண்டும் என்பதை மனிதகுலம் கற்றுக்கொள்ளும்" என அவர் கூறுகிறார்.
தலைமுறைகளை ஊக்குவிக்கும் ஒரு வாழ்க்கை
2019 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தால் நாட்டின் "மாற்றத்தை ஏற்படுத்திய பெண்களில் ஒருவராக" கௌரவிக்கப்பட்ட கலாநிதி பிரேமலா சிவசேகரம், இலங்கையில் பெண்களின் கல்வி, தொழில் முன்னேற்றம் மற்றும் தலைமைத்துவத்திற்கு ஒரு ஊக்கச் சின்னமாக திகழ்கிறார்.
அவரது வாழ்க்கைப் பயணம், சமூகத் தடைகளை உடைத்து கனவுகளை நனவாக்க விரும்பும் இளம் பெண்களுக்கு இன்று வரை ஒரு வலுவான உத்வேகமாக உள்ளது.
