( இராஜதுரை ஹஷான்)
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எதிர்க்கட்சிகளின் சகல உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நீதி அமைச்சர் தனக்குரிய அனைத்துப் பொறுப்புகளையும் தட்டிக்கழித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்த தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக, அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர தீர்மானித்தோம்.
இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த பிரேரணை எதிர்வரும் வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படும்.நீதியமைச்சர் மீதான குற்றச்சாட்டை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.ஆகவே நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் ஏற்க வேண்டும். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள். என்றார்.
