(செ.சுபதர்ஷனி)
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்ட சம்பவத்தில் மூன்று உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் ஒரு தேரருக்கும் தொடர்புப்பட்டிருப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விடயங்களை முன்வைத்தது.
மூன்று உயர் பொலிஸ் அதிகாரிகள் இந்த இலஞ்சப் பணப் பரிமாற்றத்திற்கு ஆதரவளித்து பணத்தைப் பெற்றுள்ளதுடன், அந்தப் பணம் ஒரு தேரர் ஊடாகவே குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தேரர் யார் என்பது ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளதுடன், அது குறித்து மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இது தொடர்பான விபரங்கள் வெகுவிரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மன்றுக்கு குறிப்பிட்டது.
இந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி முன்னாள் அமைப்பாளர் சரித வசந்த குமார அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் விமான நிலைய பணிப்பாளராகப் பணியாற்றிய அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
பாதாள குழு உறுப்பினரான ஹரக்கட்டாவின் மனைவியிடம் 1200 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரகித ராஜபக்ஷ,சரித் அபேசிங்க, வருண ஆகியோர் இன்று (17) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள்.
இரண்டாவது சந்தேக நபரின் சட்டத்தரணியினால் பிணைக்கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விடயங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முதல் மற்றும் மூன்றாவது சந்தேக நபர்கள் சார்பிலான எழுத்துப்பூர்வ பிணைக் கோரிக்கை ஆவணங்கள் இலஞ்ச ஊழுல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறாததால், நேற்றைய தினம் அந்த சந்தேகநபர்கள் தொடர்பான ஆட்சேபனைகளையும் நிலைப்பாட்டையும் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க முடியாது போனது.
இதன் காரணமாக, முதலாவது மற்றும் மூன்றாவது சந்தேகநபர்களின் எழுத்துப்பூர்வ பிணைக் கோரிக்கைக்கான ஆட்சேபனைகளையும் நிலைப்பாட்டையும் ஜூலை 23ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன், அதுவரையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும், ஜூலை 28ஆம் திகதி பிணைக்கோரிக்கை மீதான உத்தரவு வழங்கப்படும் என்றும் நீதிவான் மன்றில் அறிவித்தார்.
இன்றைய தினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேலதிக அறிக்கை ஒன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் அனுஷா சம்பந்தப்பெரும மன்றில் வருமாறு விடயங்களை முன்வைத்தார்.
'இரண்டாவது சந்தேக நபரின் சட்டத்தரணியின் எழுத்துப்பூர்வ பிணைக்கோரிக்கை ஆவணங்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன. ஆனால் முதலாவது மற்றும் மூன்றாவது சந்தேகநபர்களின் ஆவணங்கள் கிடைக்கவில்லை. இன்றைய தினம் இரண்டாவது சந்தேக நபரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், சிறைச்சாலைக்குள் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இதனை ஒரு விசேட காரணியாகக் கருத முடியாது என்பதால் அது குறித்து கருத்துத் தெரிவிக்கப் போவதில்லை.
கடந்த வழக்குத் தவணையின்போது, இந்தச் சம்பவத்தின் பிரதான முறைப்பாட்டாளரான 'ஹரக் கட்டா'வின் மனைவியிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் இந்தச் சம்பவம் தொடர்பான அனைத்து விபரங்களையும் உள்ளடக்கி, அவரே பதிவு செய்த வீடியோ காட்சி ஒன்றையும், இரண்டாவது சந்தேக நபருடன் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவுகளையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளார்.
'மேலும், 'ஹெர்பி' என்பவரால் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட வாக்குமூலத்தில், முதலாவது சந்தேக நபர் இந்தச் சம்பவம் தொடர்பாக தொலைபேசியில் பேசும்போது அவர்கள் இந்தியாவில் இருப்பதாகக் கூறியிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். ஹெர்பி கூறியது உண்மையா என்று விசாரணை செய்து பார்த்தபோது, 2023.03.04ஆம் திகதியன்று இந்த மூன்று சந்தேக நபர்களும் இந்தியாவுக்குச் சென்றுள்ளமை தெரியவந்தது. பின்னர் 2023.03.07ஆம் திகதியன்று இவர்கள் மூவரும் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.
ஹெர்பி மற்றும் மூன்றாவது சந்தேக நபருக்கு இடையிலான தொலைபேசி அழைப்பு விபரங்களை பகுப்பாய்வு செய்தபோது, அவர்கள் இந்தியாவில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது மூன்றாவது சந்தேக நபர் ஒரு அரச ஊழியராகப் பணியாற்றினார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.'
'இந்த மூன்று சந்தேக நபர்களுக்கும் இடையே பணம் பரிமாறப்பட்டதன் பின்னர், 1300க்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் பரிமாறப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை காவலில் எடுத்தமை குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்று விடயங்களை முன்வைத்தார்.
முதலாவது சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நெவில் அபேரத்ன,
'இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சில செல்லுபடியற்ற காரணிகள் உள்ளன. இந்த முறைப்பாடு அநாமதேயமான (பெயர்குறிப்பிடாத ) ஒன்றாகும். மேலும், ஒரு இலஞ்ச வழக்கில் வழக்குத் தொடுப்பதற்கான சான்றுப் பொருட்கள் இருக்க வேண்டும். பணம் பரிமாறப்படும் போது இவர்கள் கைது செய்யப்படவில்லை. எனது சேவைப்பெறுநர் இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் அதற்கான மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஆனால் கடந்த சில நாட்களாக அவருக்கு மருந்துகள் கிடைக்கவில்லை. இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். அத்துடன் அவருக்கு ஒன்றரை வயதான குழந்தைகள் உள்ளனர்.' என்றார்.
இரண்டாவது சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்ரதிஸ்ஸ,
'கனம் நீதிவான் அவர்களே, எனது சேவைப்பெறுநருக்கு பிணை வழங்குவது தொடர்பாக எழுத்துப்பூர்வமான சத்தியக்கடதாசி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனது சேவைப்பெறுநர் பல நிறுவனங்களுடன் தொடர்புடையவர் என முறைப்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்பட்டது. நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், இதுவரையில் அவர் யாருக்கும் அச்சுறுத்தலோ அல்லது செல்வாக்கோ செலுத்தவில்லை. சந்தேக நபர்கள் பிணையில் இருந்தாலும் அல்லது விளக்கமறியலில் இருந்தாலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.
எனது சேவை பெறுநரின் நோய் நிலைமை குறித்து சத்தியக்கடதாசியில் விவரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவித்தபடி, அவர் 'ஸ்லீப் அப்னியா' என்ற தீவிர நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இரவில் அவரது உடலில் ஒக்சிஜன் அளவு குறைவடைந்து, கார்பன்டை ஒக்சைடு அளவு ஆபத்தான நிலைக்கு உயர்வதாக வைத்தியர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர். இது நீண்டகாலமாகத் தொடர்ந்தால் இதயத் துடிப்பு முடங்கக்கூடும். 2025இல் செய்யப்பட்ட பரிசோதனைகளின்படி, அவரது மூச்சுத்தடை - குறைமூச்சுக்குறியீடு அளவு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
சிறைச்சாலைக்குள் இந்த நோய்க்குப் பயன்படுத்தவேண்டிய மருத்துவ உபகரணம் இல்லை. உடலில் ஒக்சிஜனைச் செலுத்தும் இந்த உபகரணத்தையே எனது சேவைபெறுநர் வீட்டில் பயன்படுத்தி வந்தார். தினமும் இரவில் இதனைப் பயன்படுத்துகிறார். அவர் தூங்குவதற்கே மிகவும் சிரமப்படுகிறார். ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சுவாசம் நின்றுவிடவும் வாய்ப்புள்ளது. இதய நோய் நிலைமையும் இருப்பதால் ஸ்லீப் அப்னியா நோய் தீவிரமடைந்துள்ளது. இதற்கு முறையான சிகிச்சை கிடைக்காவிடில் இதயம், மூளை போன்ற முக்கிய உறுப்புகள் மீளச் சரிசெய்ய முடியாத அளவுக்குப் பாதிக்கப்படலாம்.
அத்துடன், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பென்ட்ரைவில் உள்ள விபரங்களின் படி, ஊடக நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட பிணைச் திருத்தச் சட்டம் காரணமாக, 10 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பெருமளவிலான கைதிகள் பிணை பெற முடியாமல் சிறையில் உள்ளனர். இதனால் அவர்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். சிறைக்குள் எனது சேவைபெறுநருக்கு அவர்களால் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், தகுந்த பிணை நிபந்தனைகளின் கீழ் அவருக்கு பிணை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
மூன்றாவது சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கீத் கருணாரத்ன,
'கனம் நீதிவான் அவர்களே, இந்தப் பணம் 'உண்டியல்' முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அந்த உண்டியல் முறை எவ்வாறு செயற்பட்டது என்பது குறித்து மேலதிக விபரங்கள் எதையும் ஆணைக்குழு முன்வைக்கவில்லை. அது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. மேலும், இந்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைப்பது அவரது உயிருக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே, அவரது உயிர் ஆபத்தை ஒரு விசேட காரணியாகக் கருத்தில்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான், பிணை உத்தரவிற்காக சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
