வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைக்குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான தோட்டாக்கள் உள்ளிட்ட பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் யக்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று (16) வியாழக்கிழமை இரவில் யக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த ஆயுதக் குவியல் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சுற்றிவளைப்பின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 02 கைக்குண்டுகள், 32 பிஸ்டல் தோட்டாக்கள், எச்-16 (M-16) ரக துப்பாக்கி மற்றும் அதன் 11 தோட்டாக்கள், 06 ரிவோல்வர் தோட்டாக்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட 34,000 சிகரெட்டுகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையின்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 42 வயதுடையவர் எனவும், அவர் ராகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
