நுவரெலியாவில் பெண் உடற்பயிற்சி சிகிச்சை வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் நால்வரும் நேற்று (16) வியாழக்கிழமை நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, வழக்கின் சாட்சியங்கள் மற்றும் முன்வைக்கப்பட்ட விபரங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபர்களின் விளக்கமறியலை ஜூலை 30 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார்.
இந்தக் கொடூரக் கொலைச் சம்பவத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் பிரதான சந்தேக நபர், பிரதான சந்தேக நபரின் மனைவி, கொலைக் குற்றவாளிக்கு தப்பியோட உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள குண்டசாலை பிரதேச சபையைச் சேர்ந்த சாரதி, குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மேனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகிய நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்:
நுவரெலியா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பெண் உடற்பயிற்சி சிகிச்சை வைத்தியர் கொலைச் சம்பவம் தொடர்பில், நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
