(செ.கவிஷனா)
இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மிக உயரிய 6 பதவிகளில் 5 பதவிகளை, அதாவது 83 சதவீதத்துக்கும் அதிகமான பொறுப்புக்களை தற்காலிகமாக கடமையாற்றும் அதிகாரிகளே மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் கொள்ளளவை மீறிய வகையில் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாலும் சிறைச்சாலைகளின் ஒட்டுமொத்த நிர்வாகமும், பாதுகாப்பும் பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப செயலாளர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
கொழும்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் மிக முக்கிய மற்றும் பாதுகாப்புக்குரிய திணைக்களங்களில் ஒன்றான இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம், தற்போது முழுமையாக தற்காலிக அதிகாரிகள் கட்டுப்பாட்டின் கீழ் முடங்கி கிடக்கிறது.
தற்போது இந்த திணைக்களத்தின் மிக உயரிய 6 பதவிகளில் 5 பதவிகளை, அதாவது 83 சதவீதத்துக்கும் அதிகமான பொறுப்புக்களை தற்காலிகமாக கடமையாற்றும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய ஆணையாளர் நாயகம் மற்றும் நிர்வாக பிரிவின் 2 ஆம், 3 ஆம் நிலை அதிகாரிகள் என அனைவரும் தற்காலிகமாகவே நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர நாட்டின் ஒட்டுமொத்த சிறைச்சாலைகளின் ஆணையாளர் மற்றும் அதன் ஊடகப் பேச்சாளர் ஏ.சி கஜநாயக்க என்பவரும் தற்காலிகமாகவே கடமையாற்றி வருகிறார்.
அத்துடன் நாட்டிலுள்ள 34 சிறைச்சாலைகளில் மேல் மாகாணத்தில் உள்ள 8 பிரதான சிறைச்சாலைகளில் உட்பட அனைத்து சிறைச்சாலைகளிலும் ஒட்டுமொத்த பாதுகாப்பு விவகாரங்களும் இவ்வாறு தற்காலிக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாக விதிமுறைகளின்படி, தற்காலிக அதிகாரிகள் எந்தவொரு தன்னிச்சையான முடிவுகளையும் எடுக்க முடியாது என்பதனாலேயே இத்திணைக்களத்தின் செயற்பாடுகள் முடங்கி காணப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் ஒட்டுமொத்த சிறைச்சாலைகளிலும் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எண்ணிக்கை 10,662 ஆகும். ஆனால் குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத சந்தேகத்தின்பேரில் சிறையில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் எண்ணிக்கை 27,681 ஆகக் காணப்படுகிறது. அதாவது சிறையில் உள்ள மொத்த நபர்களில் 73 சதவீதமானோர் சந்தேகநபர்களாவர்.
இவ்வாறு தண்டனை பெற்ற கைதிகளை விட 3 மடங்கு சந்தேகநபர்கள் அடைக்கப்பட்டுள்ளமை சிறைகளின் கொள்ளளவை மீறிய நிர்வாகச் சீர்குலைவுக்கு வழிவகுத்துள்ளதுடன், நாட்டின் மொத்த சிறைக்கைதிகளின் 52 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே காணப்படுகின்றனர்.
மேலும், சிறைச்சாலை திணைக்களத்தில் உள்ள மொத்த ஊழியர்கள் 6400 பேரில் சீருடை அணியும் தகுதி பெற்றவர்கள் 5714 பேராவர். இவர்களில் சிறைச்சாலைகளின் நேரடிப் பாதுகாப்பில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்ணிக்கை 4220 ஆகும். சிறைச்சாலைகள் 24 மணித்தியாலமும் இயங்குவதால் பாதுகாப்பு அதிகாரிகள் 8 மணிநேர சுழற்சி முறையில் பணியாற்றுகிறார்கள்.
இதன்படி ஒரு பாதுகாப்பு அதிகாரி 30 கைதிகளை கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆனால், சர்வதேச மற்றும் தெற்காசிய நாடுகளின் சட்டத்தின்படி ஒரு அதிகாரிக்கு அதிகபட்சம் 8 கைதிகள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், இலங்கையில் பாதுகாப்பு அதிகாரிகள் தங்களின் இயல்பான பணித்திறனை விட அதிகமான பணிச்சுமையையும் கடுமையாக மன அழுத்தத்தையும் எதிர்கொள்கின்றனர்.
எனவே, நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளையும் இன்னும் குற்றம் நிரூபிக்கப்படாத சந்தேகநபர்களையும் ஒரே சிறையில் அடைத்து வைப்பது சர்வதேச மனித உரிமை நெறிமுறைகளுக்கு முரணானது என்பதால், இவ்விரு தரப்பினரையும் உடனடியாக வெவ்வேறு கட்டமைப்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன், சிறைகளில் ஏற்படக்கூடிய வன்முறைகளைத் தடுக்கும் பொருட்டு, நாட்டின் 34 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் நவீன டிஜிட்டல் சிறை கண்காணிப்பு மையம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
