லங்கா உர நிறுவன மோசடி முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறும் என கொழும்பு மேல் நீதிமன்றம் புதன்கிழமை (15) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் இந்த வழக்கு புதன்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கமைய நேற்றைய தினம் வழக்கு விசாரணையின் போது, முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சியாளர்கள் இருவரின் சாட்சியங்கள் நீதிமன்றத்தினால் பதிவு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்தே, வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
2016 ஆம் ஆண்டு லங்கா உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில்தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நன்மை பயக்கும் வகையில், உர நிறுவனத்தின் களஞ்சியசாலைக்குத் தரைவிரிப்பினை இடும் பணிக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதுடன், இதன் மூலம் அரசாங்கத்துக்கு சுமார் 8,859,708 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 70 ஆவது உப பிரிவின் கீழ், ஊழல் என்னும் குற்றத்தைச் செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் பிரதிவாதிக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
