இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு மற்றும் இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்கம் ஆகியவற்றின் முன்னாள் தலைவர் சுரேந்திரன் (சுரேஷ்) சுப்பிரமணியம் காலமானார்.
இத் தகவலை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு மற்றும் இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்கம் ஆகியன ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவித்துள்ளன.
சுரேஷ் சுப்பிரமணியம், இலங்கையில் ஒலிம்பிக் மற்றும் பொதுநலவாய விளையாட்டுத்துறை அமைப்புகளுக்கு பல தசாப்தங்களாக சேவையாற்றிய ஒரு சிறந்த விளையாட்டு நிர்வாகியும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவருமாவார்.
அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, முன்மாதிரியான தலைமைத்துவம் மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புகள் ஆகியவை நாட்டின் விளையாட்டுத்துறை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றியதுடன், சர்வதேச விளையாட்டு சமூகத்தில் இலங்கையின் நிலையை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றின.
அன்னாரது மறைவு ஒட்டுமொத்த விளையாட்டுத்துறைக்கும் பேரிழப்பாகும்.
அன்னாரது பூதவுடல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் 2.00 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
