(எம்.எப்.எம்.பஸீர் , செ.சுபதர்ஷனி)
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் தரவு கட்டமைப்பின் பிரதிகளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்குமாறு ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்குகு கோட்டை நீதிவான் பசன் அமரசேன புதன்கிழமை (15) உத்தரவிட்டார்.
இவ்விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் புதன்கிழமை (15) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விசேட மனுவொன்றை பரிசீலித்த பின்னரே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இவ்விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட 16 டெராபைட் கணினித் தரவுகள் அடங்கிய வன்வட்டுகளை மேலதிக விசாரணைகளுக்காகக் கொழும்பு பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பித்துள்ளதாகக் கடந்த வழக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த நிதி மோசடி தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் தரவு கட்டமைப்பின் பிரதிகளை கொழும்பு பல்கலைக்கழகத் தொழில்நுட்பக் குழுவுக்கு வழங்குமாறு ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு உத்தரவிடுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
புதன்கிழமை (15) மன்றில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பனங்களை பரிசீலித்த கோட்டை நீதிவான், விசாரணை நடவடிக்கைகளுக்குத் தேவையான மின்னஞ்சல் தரவு பிரதிகளை அத்தொழில்நுட்பக் குழுவிடம் வழங்குமாறு ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
