(சரண்யா பிரதாப்)
நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமானச் சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்துவதற்குச் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஆரம்பத்தில் இதுவொரு சோதனைத் திட்டமாக அமல்படுத்தப்படும் எனச் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்தச் சேவையில் பயன்படுத்தப்படவுள்ள ஒவ்வொரு ட்ரோன் விமானமும் ஒரே நேரத்தில் 6 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இத்தகைய பயணிகள் ட்ரோன் போக்குவரத்துச் சேவைகள் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயல்பாட்டில் உள்ளன என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த நாடுகளின் வெற்றிகரமான மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டே இலங்கையிலும் இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
