(நெவில் அன்தனி)
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (17) நிறைவடைந்த இலங்கை வளர்ந்துவரும் வீரர்கள் அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணிக்கும் இடையிலான இரண்டாவது நான்கு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஓர் இன்னிங்ஸ் மற்றும் 216 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நாள் கிரிக்கெட் தொடரை 1 - 0 என இலங்கை வளர்ந்துவரும் வீரர்கள் அணி கைப்பற்றியது.
மூன்று நாட்களில் புதன்கிழமை (17) முடிவடைந்த இரண்டாவது போட்டியில் சகலதுறைகளிலும் இலங்கை வளர்ந்துவரும் வீரர்கள் அணி ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றியீட்டியது.
இந்த தொடரில் அஞ்சல பண்டார தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸ்களில் சதங்கள் குவித்து தேர்வாளர்களை பெரிதும் கவர்ந்தார்.
முதலாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் குவித்த அஞ்சல பண்டார, இரண்டாவது போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் சதம் குவித்து அசத்தினார்.
இரண்டாவது போட்டியில் புலிந்து பெரேராவும் சதம் குவித்ததுடன் ரவிந்த ரசன்த, அசித்த வன்னிநாயக்க, சண்முகநாதன் ஷாருஜன் ஆகியோர் அரைச் சதங்கள் பெற்றனர்.
இலங்கையின் மொத்த எண்ணிக்கையில் 53 உதிரிகள் அடங்கி இருந்தது. இதில் 9 வைட்கள் மூலம் 21 ஓட்டங்கள் கிடைத்தது.
எண்ணிக்கை சுருக்கம்
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 231 (ஷக்கரே பெரிஸ் 99, நேதன் எட்வேர்ட் 28, சமோத் பட்டகே 51 - 4 விக்., நிசல அபேரட்ன 38 - 2 விக்., ஷக்தி உதார 61 - 2 விக்.)
இலங்கை வளர்ந்துவரும் வீரர்கள் அணி 1ஆவது இன்: 553 - 5 விக். டிக்ளயார்ட் (புலிந்து பெரேரா 145, அஞ்சல பண்டார 105, சண்முகநாதன் ஷாருஜன் 74, ரவிந்து ரசன்த 60, அசித்த வன்னிநாயக்க 60, உதிரிகள் 21 வைட்கள் உட்பட 53, ஸிஷான் மொட்டாரா 101 - 2 விக்.)
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணி 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 106 (ஷக்கரே பெரிஸ் 28, டெமெல் எவ்லின் 26, ரிவால்டோ கிளார்க் 21, அசித்த வன்னிநாயக்க 1.5 - 0 - 5 - 4 விக்., ஷக்தி உதார 25 - 3 விக், மிஹரங்க சில்வா 24 - 2 விக்.)
முதலாவது போட்டி ஆட்டநாயகன்: அஞ்சல பண்டார
இரண்டாவது போட்டி ஆட்டநாயகன்: புலிந்து பெரேரா
