(நெவில் அன்தனி)
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றின் ஏ அணிகளுக்கு இடையிலான மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட முதலாவது அணியாக இந்தியா தகுதிபெற்றது.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இலங்கை ஏ அணிக்கு எதிரான இரண்டாம் சுற்று போட்டியில் சுப்பர் ஓவரில் தோல்வி அடைந்த இந்தியா ஏ அணி, இன்று நடைபெற்ற தனது கடைசி இரண்டாம் சுற்று லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியை 101 ஓட்டங்களால் வெற்றிகொண்டதன் மூலம் இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் அணித் தலைவர் திலக் வர்மா 59 ஓட்டங்களையும் ப்ரியான்ஷ் ஆரியா, குமார் குஷாக்ரா ஆகியோர் தலா 58 ஓட்டங்களையும் வைபவ் சூரியவன்ஷி 38 ஓட்டங்களையும் ருத்துராஜ் கய்க்வாட், விப்ராஜ் நிகம் ஆகியோர் தலா 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் பர்மானுல்லா, அப்துல்லா அஹமத்ஸாய் ஆகிய இருவரும் தலா 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பரிதூன் தாவூத்ஸாய் 74 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கடினமான 319 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் ஏ அணி 36.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது.
பாஹிர் ஷா 57 ஓட்டங்களையும் பைஸால் ஷினோஸதா 46 ஓட்டங்களையும் அணித் தலைவர் இம்ரான் மிர் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நிஷாந்த் சிந்து 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் யாஷ் தாகூர் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இன்றைய போட்டி முடிவுடன் இந்தியா ஏ அணி 4 புள்ளிகளையும் இலங்கை ஏ அணி 4 புள்ளிகளையும் பெற்று நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன.
இலங்கை ஏ அணிக்கும் ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கும் இடையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கடைசி இரண்டாம் சுற்று லீக் போட்டியில் இலங்கை ஏ அணி வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஆப்கானிஸ்தான் ஏ அணி மிகப் பெரிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மாத்திரமே இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெறும்.
இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
