(செ.கவிஷனா)
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் சில தரப்பினர் தொடர்ந்து ஊடகச் சந்திப்புகளை நடத்தி இந்த விவகாரங்களை திசைதிருப்ப முயல்வதை விடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியைப் பெற்றுத்தர உழைக்க வேண்டும். அதேபோல் உண்மை குற்றவாளிகளையும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியவர்களையும் விடுத்து, வேறு ஒருவரை நோக்கி விரல் நீட்டும் நாடகமே தற்போது அரங்கேறி வருகிறது என்று ஜனநாயத்துக்கான இலங்கை சமூக ஊடகவியாளர்கள் அமைப்பின் ஆலோசகர் அதீத எதிரிசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (18) ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சபாநாயகரின் அண்மைக்காலக் கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். முறையான விசாரணைகள் நடத்தப்படுவதற்கு முன்பாகவே சிலரை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பதற்காகவே இத்தகைய கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இத்தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரானின் மனைவியின் சகோதரர் அளித்த வாக்குமூலத்தின்படி, தாக்குதல் நடப்பதற்கு முன்னதாகவே, அதனுடன் தொடர்புடைய ‘சாரா’ எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் குறித்த மிக முக்கியமான தகவல்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பே, சாரா இருக்குமிடம் மற்றும் அவரது தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் அப்போதைய உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட போதிலும், அவை தொடர்பாக முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அப்போதைய உயர்மட்ட அதிகாரிகளான ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு இது குறித்து கடிதம் மூலம் விபரங்கள் வழங்கப்பட்டிருந்தும், அந்தத் தகவல்கள் கீழ்மட்ட அதிகாரிகளுக்குக் கொண்டு செல்லப்படாமல் அதி இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இச்செயற்பாடு ஒட்டுமொத்த விசாரணைகளையும் பெரிதும் பாதித்துள்ளதுடன், நீதிமன்றங்கள் மூலம் இந்த விவகாரங்களுக்கு தீர்வு காண முற்பட்டாலும், தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறைச் சூழல் காரணமாக மக்கள் மத்தியில் விசாரணைகள் மீதான நம்பகத்தன்மை முற்றாகக் குறைந்துள்ளது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் சில தரப்பினர் தொடர்ந்து ஊடகச் சந்திப்புகளை நடத்தி இந்த விவகாரங்களை திசைதிருப்ப முயல்வதை விடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியைப் பெற்றுத்தர உழைக்க வேண்டும். மத உணர்வுகளையோ அல்லது தேசியவாதத்தையோ தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்ப்பது அவசியமாகும். ஏற்கனவே உண்மைகளையும் முக்கிய ஆதாரங்களையும் மூடிமறைத்துவிட்டு, புதியதொரு கோணத்தில் விசாரணைகளை திசைத்திருப்ப முயலும் நபர்களின் பின்னணியில் அரசியல் சுயலாபங்களே காணப்படுகின்றன. இது சட்டத்தின் மாண்பையும், நடுநிலையையும் பலத்த கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், உண்மை குற்றவாளிகளையும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியவர்களையும் விடுத்து, வேறு ஒருவரை நோக்கி விரல் நீட்டும் நாடகமே தற்போது அரங்கேறி வருகிறது. உண்மைகளை மறைக்கும் இத்தகைய செயற்பாடுகளை ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதே தற்போதைய அவசியத் தேவையாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், கடந்த சில நாட்களாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, அரசியல் தலைவர்களான விமல் வீரவன்ச, உதயகம்மன்பில, திலீத் ஜயவீர மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஜனாதிபதி செயலக செயற்பாட்டாளர்கள் பலர் முன்னிலையாகியிருந்தனர். நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள தரப்பினர், சட்டங்கள் அரசியல் நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும். அனைத்து அரசியல் தரப்பினரும் பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டாலும், அச்சட்டங்கள் அப்பாவி மக்களைப் பழிவாங்குவதற்கோ அல்லது அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எனவே, அதற்குரிய முறையான திருத்தங்கள் இச்சட்டங்களில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதே தற்போது எழுந்துள்ள பிரதான கோரிக்கையாகும் என்றார்.
