கடந்த மூன்று மாதங்களாக மேற்காசியாவில் நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அமெரிக்காவும் ஈரானும் 14 அம்ச இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
பிரான்ஸின் வேர்சாய் அரண்மனையில் உத்தியோகப்பூர்வமாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உத்தியோகப்பூர்வ ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் உடனடியாக அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கருத்துத் தெரிவிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உடனடியாக அமுலுக்கு வரும் என உறுதிப்படுத்தினார்.
பிரான்சின் வேர்சாய் அரண்மனையில் நடைபெற்ற இரவு விருந்தின் போது, தாம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த 14 அம்ச இடைக்கால ஒப்பந்தத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருதல், விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் குறித்த தளர்த்தல்கள், ஹோர்முஸ் நீரிணை ஊடான கடல்சார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
