(க.சிவலிங்கமூர்த்தி)
உயிர்த்த ஞாயிறு கொடூர பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஒட்டுமொத்த ராஜபக்ஷ குடும்பத்தினருமே சம்பந்தப்பட்டுள்ளனர். உளவுத்துறைத் தகவல்கள் வெளியாகும்போது தான் மாட்டிக்கொள்வார் என்ற அச்சத்தில் சலேவுக்கு முன்பே கோட்டாபய தப்பிக்க முயல்கிறார் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா சூளுரைத்துள்ளார்.
கொழும்பில் இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
திருடனுக்கு முன்னரே கோட்டாபய முந்திக்கொள்கிறார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுரேஷ் சலே ஏதேனும் உண்மைகளை நீதிமன்றில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், தன்னை கைது செய்ய வேண்டாம் என்று கோட்டாபய ராஜபக்ஷ அவசரமாக நீதிமன்றத்தை நாடியுள்ளார். சுரேஷ் சலே விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இந்த கொடூர குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவந்துவிடும் என்ற பயத்தில் சலேவுக்கு முன்பே கோட்டாபய தப்பிக்க முயல்கிறார்.
கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்காக அவரது ஆதரவாளர்களும் விமல் வீரவன்ச போன்றவர்களும் கவிதைகளையும் பாடல்களையும் பாடி, இந்த நாட்டை காப்பாற்ற 'தியசென் குமாரன்' பிறந்துள்ளதாகக் கூறினர். ஆனால் போரின் இக்கட்டான காலகட்டத்தில் தனது இராணுவ சீருடையைக் கழற்றி எறிந்துவிட்டு, மன அழுத்தம் என்று கூறி கோட்டாபய நாட்டை விட்டு ஓடினார் என்பதை நாம் அன்றே நாட்டு மக்களுக்குச் சுட்டிக்காட்டினோம். அவ்வாறு ஓடிய ஒருவரை மீண்டும் அழைத்து வந்து இந்த நாட்டை இரண்டு வருடங்களில் முழுமையாக திவாலாக்கினர். இறுதியில் உடுத்திய துணியுடன் அவர் நாட்டை விட்டு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. இதுதான் கோட்டாபயவின் உண்மையான கதை.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் ஏதோ ஒரு புள்ளியில் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்புபட்டிருக்கிறார் என்பது தற்போது மிகத் தெளிவாக நிரூபணமாகியுள்ளது. நாமல் ராஜபக்ஷவும் ஒட்டுமொத்த ராஜபக்ஷ குடும்பமும் இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளனர். இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு சிவில் மற்றும் இராணுவ சதியாகும்.
2019ஆம் ஆண்டு முதல் நாம் இதனைத் தொடர்ச்சியாகக் கூறி வருகிறோம். ஆனால், அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களோ, ஜனாதிபதிகளோ அல்லது பாதுகாப்பு அமைச்சர்களோ இது குறித்து முறையான விசாரணைகளை நடத்தவில்லை. மாறாக, இந்த தாக்குதல் குறித்து உண்மைகளைக் கண்டறிந்த ஷாணி அபேசேகர போன்ற நேர்மையான அதிகாரிகளைப் பழிவாங்கி, சிறையில் அடைத்து, அவர்களுக்குக் கொடிய வைரஸ் தொற்றைப் பரப்பிக் கொலை செய்யவே கோட்டாபய அரசாங்கம் முயன்றது.
சுரேஷ் சலேவின் பெயர் பல்வேறு விசாரணை அறிக்கைகளில் சந்தேக நபராகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலும், அவரைத் தேசிய புலனாய்வுத்துறை பிரதானியாக கோட்டாபய நியமித்தார்.
சுரேஷ் சலே மற்றும் கோட்டாபய ஆகியோரால் உருவாக்கப்பட்ட இராணுவ புலனாய்வுத்துறை பிரிவு, ராஜபக்ஷ குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றும் ஒரு கூலிப்படையாகவே செயல்பட்டது. சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட பின்னர் நாட்டில் பாதாள உலகக் கொலைகள் முற்றாக நின்றுவிட்டன. இதிலிருந்து ராஜபக்ஷாக்களின் அனைத்து கொடூர ஒப்பந்தங்களையும் அவரே நிறைவேற்றினார் என்பது உறுதியாகிறது. அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளைப் போல, இந்த கொடூர குற்றங்கள் குறித்த பல முக்கிய ஆதாரங்கள் அவரிடம் மறைந்திருக்கின்றன. அதனால்தான் அவர் தனது மடிக்கணினி மற்றும் அதன் ரகசிய கடவுச்சொற்களை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்க மறுத்து வருகிறார்.
மறுபுறம், மஹிந்த ராஜபக்ஷவும் ரோஹித அபேகுணவர்தன போன்றவர்களும் தங்களுக்கு ஆட்சி செய்ய அனுபவம் இருப்பதாகக் கூறி மீண்டும் அதிகாரத்தைக் கேட்கிறார்கள். நாட்டை இரண்டு வருடங்களில் திவாலாக்கியதுதான் இவர்களின் அனுபவமா? மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளில் நின்று உயிரிழந்தனர்.
உர பற்றாக்குறையை ஏற்படுத்தி, சீனாவிலிருந்து கழிவு உரங்களை இறக்குமதி செய்து அதற்கு நட்டஈடும் வழங்கினர். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியபோது நட்டஈடு பெற்றுத்தருவதாகக் கூறி நாடகமாடி, அந்தப் பணத்தையும் திருடினர். நான்கு கோடி ஊழல் குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்துக்கு வருமாறு அழைத்தபோது, பாம்பு கடித்துவிட்டது என்று கூறி ரோஹித அபேகுணவர்தன மறைந்திருந்தார். இத்தகைய மோசடி அனுபவங்களே இவர்களிடம் உள்ளன.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக 200க்கும் மேற்பட்ட அப்பாவி நாட்டு மக்களையும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் படுகொலை செய்த கொடூர அனுபவமே ராஜபக்ஷ குடும்பத்துக்கு உள்ளது. திருட்டுக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது, நடக்கக்கூட முடியாத தங்களின் வயதான டெய்சி பாட்டியை நீதிமன்றத்துக்கு இழுத்து பலிக்கடாவாக்கினர். எனவே, இந்த வருடம் ஊழல் நிறைந்த ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் கலாசாரத்தை ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறியும் வருடமாக மாறவேண்டும். எமக்குச் சீர்திருத்தங்கள் தேவையில்லை, இந்த மோசமான அரசியல் கலாசாரம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். ராஜபக்ஷ குடும்பத்தினர் சுதந்திரமாக நடமாடும் இறுதி வருடமாக இந்த வருடத்தை நாட்டு மக்கள் மாற்றியமைக்கவேண்டும் என்றார்.
