(க.சிவலிங்கமூர்த்தி)
உலகளாவிய ரீதியில் நிலவிய 111 நாட்கள் யுத்த சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு இடைவேளையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமைக்கு பாராட்டுக்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசாங்கம் உடனடியாக நாட்டுக்குத் தேவையான எரிபொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்து சேமிக்க வேண்டும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எங்களது கௌரவமான நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கின்றோம். 111 நாட்கள் நீடித்த பதற்றமான யுத்த நிலவரத்துக்கு மத்தியில் அவர் ஒரு அமைதியான இடைவேளையை உருவாக்கிக் கொடுத்துள்ளார். இதற்காக டொனால்ட் ட்ரம்புக்கு ஒட்டுமொத்த உலகமே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றியளிக்க வேண்டும் என நான் மனதார வாழ்த்துகின்றேன்.
இந்த 111 நாட்கள் காலப்பகுதி என்பது எமது நாட்டுக்கு மிக முக்கியமானதாகும். எமது நாட்டில் முறையான தொலைநோக்குப் பார்வையும், திறமையும் கொண்ட ஆட்சியாளர்கள் இருப்பார்களேயானால், இந்தச் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி நாட்டிற்குத் தேவையான எரிபொருட்களை உடனடியாக இறக்குமதி செய்து அவற்றைச் சேமித்து வைத்திருக்க முடியும். ஏனெனில் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப்பகுதி தற்போது கப்பல் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய அரசாங்கத்திடம் நான் கௌரவமாக ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். தயவுசெய்து இந்த பொன்னான சந்தர்ப்பத்தில் டீசல், பெற்;ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை அதிகளவில் நாட்டுக்குள் கொண்டு வந்து சேமித்து வையுங்கள். அவ்வாறு சேமிக்கப்படும் எரிபொருட்களை மீண்டும் பழைய மலிவு விலைகளுக்கே மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது நாட்டில் எரிபொருட்களின் விலைகள் வானளாவிய ரீதியில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அடுக்கடுக்கான விலையேற்றம் காரணமாக எமது நாட்டு சாதாரண மக்கள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாமல் பெரும் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர். மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும், இனிமேலாவது அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் உண்பதற்கும் வழிகளை ஏற்படுத்துங்கள். விலைகளை உயர்த்தி வைத்தவர்கள், தற்போது ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு சர்வதேசச் சூழல் வழமைக்குத் திரும்பியுள்ளமையினால், உள்நாட்டிலும் விலைகளை உடனடியாகக் குறைப்பதற்கு முன்வர வேண்டும்.
அளவுக்கு அதிகமான விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக எமது நாட்டு மக்கள் தங்களின் மன அழுத்தங்களைக் குறைத்துக் கொள்ள குறைந்தபட்சம் ஒரு பொழுதுபோக்குச் சுற்றுலாவைக் கூட மேற்கொள்ள முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றார்கள். மக்கள் சுற்றுலா செல்வதைக் கூட இந்த எரிபொருள் விலையேற்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. எனவே எமது நாட்டு மக்களுக்குத் தேவையான பொருளாதார நிவாரணங்களை உடனடியாக வழங்கி, அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கும், சுதந்திரமாக பயணங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் உடனடியாக உரிய வழிவகைகளைச் செய்ய வேண்டும் என்றார்.
