இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 3 ஆம் திகதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுப் பரீட்சையின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட பகுதிகளில் வினாத்தாள் கசிவு தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனை அடுத்து, முன்னர் நடைபெற்ற நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டு, மீள்பரீட்சை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்வின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், தேர்வு தொடர்பான தகவல்கள் மீண்டும் கசியாமல் தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவு 69A இன் அவசரகால விதிகளின் கீழ், டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 ஆம் திகதி வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், டெலிகிராம் தளத்தில் ஏற்கனவே அனுப்பப்பட்ட செய்திகளை திருத்தும் வசதியையும் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை முடக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நீட் பரீட்லையின் வினாத்தாள் டெலிகிராம் வழியாக பரவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
