(செ.கவிஷனா)
பிராந்திய மற்றும் உலகளாவிய உற்பத்தி விநியோகச் சங்கிலியில் இலங்கை ஒரு போட்டித்தன்மை வாய்ந்த நாடாக மாற வேண்டுமாயின், பொதுப் போக்குவரத்து மற்றும் தளவாடக் கட்டமைப்பில் அரசாங்கம் தொடர்ந்தும் முதலீடு செய்ய வேண்டியது அவசியம் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இன்றும் பெரும்பான்மையான மக்கள் தமது வேலைகளுக்குச் செல்வதற்கு பொதுப் போக்குவரத்தையே நம்பியிருக்கும் பின்னணியில், ஒரு ஊழியரின் தினசரி உற்பத்தித்திறனை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக பொதுப் போக்குவரத்தின் தரமே அமைகிறது. நாளாந்தம் பணிக்குச் செல்லும் போதும், மாலையில் வீடு திரும்பும் போதும் பொதுப் போக்குவரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் அவர்களின் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு நேரடியாகப் பங்களிப்பதுடன், ஒட்டுமொத்த நாட்டின் உற்பத்தித்திறனையும் அது வெகுவாகப் பாதிக்கின்றது.
முறையான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு இல்லாததன் காரணமாக, மக்கள் தனிநபர் போக்குவரத்தை நாட வேண்டியுள்ளதால் ஊழியர்களின் மாதாந்த செலவுகளும், பிள்ளைகளின் போக்குவரத்துக்கான செலவுகளும் அதிகரித்துள்ளதுடன், இது மறைமுகமாக நாட்டின் உற்பத்திச் செலவை பெருமளவில் உயர்த்தியுள்ளது. கடந்த சில தசாப்தங்களாக பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் பன்முக போக்குவரத்து மையங்கள் முறையாகக் கட்டியெழுப்பபடாததால், பொருட்கள் மற்றும் ஆவணப் பரிமாற்றத்திற்கான செலவுகளும் அதிகரித்துள்ளன.
மேலும், நாட்டின் மொத்த ஆற்றல் தேவையில் மூன்றில் ஒரு பங்கு தனிநபர் வாகனங்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசலுக்காகவே செலவிடப்படுவதுடன், தனிநபர் வாகனங்கள் நகரங்களை ஆக்கிரமிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவு ஆகியவற்றால் நாட்டிற்கு ஏற்படும் பொருளாதார இழப்பு மதிப்பிட முடியாத ஒன்றாகக் காணப்படுகிறது.
1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர், பொருளாதார வளர்ச்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை புரிந்து கொள்ளாத தொலைநோக்கற்ற தலைவர்களாலும், உலக நாடுகள் இன்று நிராகரிக்கும் புதிய கொள்கைகளாலும் இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறை வீழ்ச்சியடைந்ததுடன், பொதுப் போக்குவரத்தில் இருந்து அரசாங்கம் விலகியமை ஒரு தவறான முடிவாக அமைந்தது.
இருப்பினும், 2024 செப்டம்பரில் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் இந்த தவறான கொள்கையை மாற்றியமைத்துள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபை, புகையிரதத் திணைக்களம் அல்லது வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் நிதி அறிக்கைகளை மட்டும் வைத்து போக்குவரத்துத் துறையின் பொருளாதாரப் பலன்களை மதிப்பிட முடியாது. இவை இலாபத்தை நோக்கமாகக் கொண்டவை அல்லாமல் பொதுப் பொருட்கள் மற்றும் சேவைகள் என்பதால், இலாபத்தை முதன்மைப்படுத்தாமல் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்துவது நாட்டின் பொருளாதாரத்திற்கு அவசியமானதாகும்.
கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் பொதுப் போக்குவரத்து மற்றும் வீதித் தொகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வியக்கத்தக்கவை, ஏற்றுமதியை மையமாகக் கொண்ட உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான முதல் அத்தியாவசிய காரணி இதுவே ஆகும். இழந்த திறமையான போக்குவரத்து அமைப்பு எமது எதிர்கால சந்ததிக்கு கிடைக்கும் என்றும், உலகளாவிய தளவாடத் திறன் குறியீட்டில் இலங்கை நிச்சயம் முன்னேறும் என்றார்.
