(எம்.ஆர்.எம்.வசீம்)
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் இரண்டையும் ஒன்றிணைத்து பொதுவானதொரு பொறிமுறைக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடாமல் அரரசாங்கம் இதனை மேற்கொண்டால், அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொண்டு பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்வோம் என தொழிலாளர்களின் தேசிய சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தன.
ஈ.பி.எப். ஈ.ரீ.எப். ஆகிய இரண்டு நிதியங்களையும் பொதுவானதொரி பொறிமுறைக்கு கொண்டுவர அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை (17) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே இவ்வாறு எச்சரிக்கை விடுத்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த அரசாங்க தாதியர்களின் சங்கத்தின் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய குறிப்பிடுகையில்,
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் இரண்டையும் ஒன்றிணைத்து பொதுவானதொரு பொறிமுறைக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. தற்போது அதற்கு தேவையான அமைச்சரவை பத்திரமும் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் யாருடனும் கலந்துரையாடாமல் நினைத்த பிரகாரம் செயற்பட்டு வருவதையே காண முடிகிறது. ஈ.பி.எப். என்பது ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்பை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த நிதியம் மத்திய வங்கி ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈ.ரீ.எப். பொதுவான நிதியத்தின் கீழ் மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் செயற்பட்டு வருகிறது.
இந்த இரண்டு நிதியங்களிலும் தற்போது 5.5 ரில்லியன் ரூபா இருக்கிறது. தெற்காசியாவில் இருக்கும் மிகப்பெரிய நிதியமாக உருவாகி இருக்கிறது. இவ்வளவு பாரிய நிதி தொகை தொடர்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து முகாமைதுத்துவ நடவடிக்கைகளும் மத்திய வங்கி ஊடாகவே மேற்கொள்ளப்படுவதால், அந்த நிதியத்துக்கு பாதுகாப்பு ஒன்று இருக்கிறது. அதனால் இந்த நிதியம் அரசாங்கம் பொறுப்புக்கூறக்கூடிய அரச பாதுப்பின் இருக்க வேண்டும் என்பதையே ஊழியர்களின் நிலைப்பாடகும்.
இந்த இரண்டு நிதியங்களும் எந்த பாதிப்பும் இல்லாமல் இவ்வளவு காலமும் பாதுகாப்பான முறையில் இருக்கும் நிலையில் அரசாங்கம் இந்த இரண்டு நிதியங்களையும் மத்திய வங்கியில் இருந்து வேறுபடுத்தி, பொதுவானதொரு பொறிமுறையின் கீழ் கொண்டுவரவேண்டும் என கேட்கிறோம். இந்த நிதியங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் இருந்து வருகிறது எங்களுக்கு தெரியும். அதற்காக ஊழியர்களின் பணத்தை யாருடைய தேவைக்கும் ஏற்றவகையில் செயற்படுத்த முடியாது.
அதேநேரம் இந்த நிதியங்கள் தொடர்பில் ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ளும்போது அது தொடர்பானவர்களுடன் கலந்துரையாடவேண்டும். அதாவது ஊழியர் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாட வேண்டும். ஆனால் அரசாங்கம் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடுவதாக தெரிவித்து, மக்கள் விிடுதலை முன்னணியின் தொழிற்சங்கத்துடன் மாத்திரம் கலந்துரையாடி தீர்மானங்களை எடுத்துவருகிறது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் பிரகாரமே தற்போது இந்த இரண்டு நிதியங்களையும் அரசாங்கம், முதலாளிமார், தொழிற்சங்கம் என்ற முற்தரப்பின் கீழ் கொண்டுவந்து நிர்வகிக்கவே முயற்சிக்கிறது. அவ்வாறு மேற்கொண்டால், அரரசாங்கத்தின் முதலாளிமாரும், அரசாங்கத்தின் தொழிற்சங்கத்தையும் இணைத்துக்கொண்டு அரசாங்கம் தனக்கு தேவையான முறையில் இந்த நிதியத்தை பயன்படுத்த இடமிருக்கிறது. அதற்கு இடமளிக்க முடியாது.
அதனால் அரசாங்கம் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடாமல் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டு நிதியங்களையும் திறைசேரியின் பொறுப்பில் இருந்து வெளியில் எடுத்து பொதுவான முறைறையின் கீழ் கொண்டுவர எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம் அந்த பணத்துக்கு எந்த பாதுகாப்பும் இல்லாமல் போகிறது. எனவே தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடாமல் அரசாங்கம் இதனை மேற்கொண்டால், அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொண்டு பாரிய எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்வோம் என்றார்.
