(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அவசர நிலைமையை கையாளும் உத்தியோகத்தர்கள் 10 பேர் (பந்த பொலிஸ்) மற்றும் 21 கைதிகள் உயிரிழந்தமை தொடர்பில் எதிர்வரும் காலத்தில் சிறைச்சாலை நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வழக்கு விசாரணை மற்றும் தண்டனை விதிப்பு ஆகியவற்றை தடுக்கும் வகையில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக நேற்று வியாழக்கிழமை (16) நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
ஒரே சம்பவத்திற்காக இரண்டு வழக்கு விசாரணைகளை நடத்தி தண்டனை வழங்குவது பொருத்தமற்றது எனவும், இந்த வழக்கு தற்போது தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், சிறைச்சாலை நீதிமன்றம் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணை அவசியமற்றது எனவும் கருணாதிலக அங்கு சுட்டிக்காட்டினார்.
அத்துடன், எதிர்வரும் தினத்தில் சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பாக சட்ட மாஅதிபரும் இந்த வழக்கு தொடர்பில் விடயங்களை முன்வைப்பார் எனவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
சிறைச்சாலைகள் சட்டத்தின் கீழ் சிறைச்சாலைக்கு அதற்கான அதிகாரம் உள்ளதால், இது குறித்து ஆராய்ந்து எதிர்வரும் தினத்தில் தேவையான உத்தரவை பிறப்பிப்பதாகத் பிரதான நீதிவான் ஷிலனி பெரேரா மன்றில் அறிவித்தார். அதேவேளை, சிறைச்சாலைக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் சம்பவ இடத்தை நில அளவைத் திணைக்களத்தின் ஊடாக ட்ரோன், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்ய உத்தரவிடுமாறும் கருணாதிலக நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் களுஆராய்ச்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மேலதிக அறிக்கையொன்றை மன்றில் சமர்ப்பித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த சஞ்சு தில்ருக்ஷான் என்பவரின் மரண விசாரணைக்கான சாட்சி விசாரணை கடந்த 11ஆம் திகதி மாளிகாகந்த நீதிமன்றத்தில் நடைபெற்றதுடன், இதன்போது அவரது உடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தோட்டா பகுதி, ஆடைகள் மற்றும் இரத்த மாதிரிகள் வழக்கு சான்றுகளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அந்த சான்றுப் பொருட்களை முறையாக வழக்கு சான்று அறையில் வைப்பிடுமாறு நீதவான் உத்தரவிட்டார். முன்னைய தின உத்தரவுக்கு அமைவாக, சம்பவத்தில் உயிரிழந்த சம்பத் புஷ்பகுமார, ஹர்ஷ பிரியங்கர மற்றும் தனிந்து ஹஷ்மிக ஆகியோரின் மரண விசாரணைகளுக்கான சாட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது சாட்சியமளிப்பதற்காக உயிரிழந்தவரின் உறவினர்களான சுரஞ்சி பெர்னாண்டோ, நிருபா ரோஷானி, மனோஜ் பிரியங்கிகா, நிமாலி ஷிரந்தி மற்றும் ஜயலத் பெரேரா ஆகியோர் மன்றில் சாட்சியமளித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் உட்பட 287 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த 14ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. சம்பவத்துடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்படும் அனைத்து சந்தேக நபர்களுக்கும் எதிராக கொலைக் குற்றம், துப்பாக்கி கட்டளைச்சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்டனைச் சட்டக் கோவையின் 102, 113, 146, 186, 300, 315, 316, 317, 344 மற்றும் மேற்கூறிய சட்டங்களின் கீழ் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியது. வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஏதுவான வகையில் அதிகாரிகள் கோரிய அனைத்து உத்தரவுகளையும் நீதிவான் பிறப்பித்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் பரிசீலித்த நீதிவான், விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் 23ஆம் திகதி சமர்ப்பிக்குமாறும், தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த கைதி மற்றும் இரு அதிகாரிகளின் மரண விசாரணைகள் தொடர்பில் இதுவரை சாட்சி அழைக்கப்படாத மரணங்கள் தொடர்பில் சாட்சிகளை அழைக்கத் தயாராகுமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
சிறைச்சாலைகள் திணைக்களம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி முதித்த ரோஹண முன்னிலையானார். இதன்போது அனைத்துக் கைதிகளினதும் மருத்துவ அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கான உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு அவர் கோரினார். எனினும், அந்த உத்தரவு கடந்த 9ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிவான் அறிவித்தார்.
அத்துடன் இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அது தொடர்பில் தற்காலிகமாக ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரிவான அறிக்கை எதிர்வரும் தினத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சிறைச்சாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
