(செ.சுபதர்ஷனி)
நவகமுவ பகுதியில் வியாழக்கிழமை (16) இரவு நபர் ஒருவர் மீது இனந்தெரியாத சந்தேக நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரதொட, வந்துரம்முல்ல சமனல உயன பகுதியில் நேற்று (16) இரவு மேற்படி துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
கடுவெல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சந்தேக நபர்கள் கைத் துப்பாக்கியால் தாக்கியுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய தகராறே இக்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் பிரதேசவாசிகளால் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (17) காலை சம்பவ இடத்துக்கு வருகை தந்த கடுவெல பதில் நீதிவான் பி.ஜி.பி. கருணரத்ன நீதிவான் தளபரிசோதனையினை முன்னெடுத்திருந்தார்.
மேற்படி துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
