நாட்டின் டிஜிட்டல் ஏற்றுமதியை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதற்கும், 15 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் உள்நாட்டுத் தொழில்நுட்ப சிறு மற்றும் நடுத்தர நடுத்தர அளவிலான நிறுவனங்கள் மிக முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'திஷா வழிகாட்டல் திட்டம் 2026' ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
குறித்த வழிகாட்டல் திட்டத்தின் தாக்கம், இதில் பங்கேற்கும் நிறுவனங்களைத் தாண்டி பரந்தளவில் எதிரொலிக்கும். ஒரு தொழில்நுட்ப சிறு மற்றும் நடுத்தர நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு வளரும்போது, அது திறமையான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
ஏற்றுமதி மூலம் வெளிநாட்டு நாணயத்தை ஈட்டித் தருகிறது மனிதவளம், அறிவுசார் சொத்துக்களில் முதலீடு செய்கிறது. அதோடு மட்டுமல்லாமல் விவசாயம், சுற்றுலா, உற்பத்தி, சுகாதாரம், கல்வி மற்றும் விநியோகச் சங்கிலி ஆகிய துறைகளை டிஜிட்டல் மயமாக்கவும் பெரிதும் உதவுகிறது.
இத்திட்டம் பங்கேற்கும் நிறுவனங்களை மாற்றுவதோடு மட்டுமல்லாமல், அறிவு மற்றும் அனுபவப்பகிர்வு மூலம் வழிகாட்டிகளாக இருக்கும் நிபுணர்களையும் மேலும் வளப்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வலுவான தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்பானது, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மாற்றம் மற்றும் டிஜிட்டல் இலக்குகளை அடைவதற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும்
இந்தத் திட்டத்தின் ஆரம்பமானது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஆழமடைந்து வரும் தொழில்நுட்ப கூட்டாண்மையைப் பிரதிபலிக்கிறது. அத்துடன் இந்தியாவின் தொழில்நுட்பத் துறை உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
அந்த வளர்ச்சிக்கு இந்தியாவின் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பு முக்கியப் பங்காற்றியுள்ளது. அந்தப் பெருமதிமிக்க அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்துகொள்வது இரு நாடுகளுக்கும் இடையிலான நடைமுறைச் சாத்தியமான மற்றும் தாராளமான கூட்டாண்மையாகும்.
இது வெறும் உடன்படிக்கைகளுடன் நின்றுவிடாமல், வலுவான நிறுவனங்கள், சிறந்த வேலைவாய்ப்புகள் மற்றும் புதிய வாய்ப்புகள் மூலம் அளவிடப்படும் என்றார்.
