(என்.வீ.ஏ.)
இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிலைமாறுதல் குழு, விரைவில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் எடின்பரோவில் நடைபெற்ற ஐசிசியின் வருடாந்த கூட்டங்களின் பின்னர் ஆளுமை, உறுப்புரிமை, உறுப்பினர் ஒத்துழைப்பு ஆகியன தொடர்பான தீர்மானங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை அங்கீகரித்துள்ளது.
இதற்கு அமையவே ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் நிர்வாக சபைத் தெர்தல் நடத்தப்படவேண்டியதன் அவசியத்தை ஐசிசி வலியுறுத்தியுள்ளது.
ஐசிசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
'ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான புதிய தகவல்களை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பணிப்பாளர் சபை பெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் திருத்தப்பட்ட யாப்பு விதிகளை நோக்கிய முன்னேற்றத்தையும் ஐசிசி பணிப்பாளர் சபை கவனத்தில் கொண்டுள்ளது. கூடிய விரைவில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அது மீண்டும் வலியுறுதுகிறது. மேலும் தற்போதைக்கு ஐசிசி பணிப்பாளர் சபை கூட்டங்களில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதிநிதித்துவம் தொடராது என்பதையும் ஒப்புக்கொண்டது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக, எந்தவொரு நாட்டிலும் கிரிக்கெட் நிறுவனங்களுக்கு அல்லது சபைகளுக்கு அரசாங்கத்தால் நியமிக்கப்படும் எந்தவொரு அமைப்பும் கிரிக்கெட்டை நிர்வகிப்பதை ஐசிசி கடுமையாக எதிர்ப்பதுடன் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாக சபைகளை மாத்திரமே அங்கீகரிக்கும்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தலைமையில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட நிலைமாறுதல் குழுவே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை நிர்வகித்து வருகிறது.
ஷம்மி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவினர் ஏப்ரல் 28ஆம் திகதி ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யததை அடுத்தே நிலைமாறுதல் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்தார்.
இது இவ்வாறிருக்க, பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை ஐசிசி ஏற்றுக்கொண்டதுடன் அவரை பூரண அங்கத்துவ நாடு சார்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் அங்கீகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் மொரிஷியஸை அதன் 111வது உறுப்பினராகச் சேர்ப்பதற்கும் ஐசிசி ஒப்புதல் அளித்தது.
