(நா.தனுஜா)
நபர்களைப் பலவந்தமாகத் தொழிலுக்கு அமர்த்தி, அதனூடாக முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ தயாரிக்கப்பட்ட எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
ஜனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க 1969 ஆம் ஆண்டு முதலாம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் ஊடாகத் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் வெளியிட்டுள்ள 2496/38 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமே மேற்குறிப்பிட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வர்த்தமானி அறிவித்தலின்படி குறித்தவொரு நிறுவனம் அல்லது இலங்கையினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதியாளர்கள், அந்தப் பொருட்கள் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ நபர்களை பலவந்தமாகத் தொழிலுக்கு அமர்த்தி, அதனூடாகத் தயாரிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் வகையில் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் கோரப்படும் ஆவணங்கள், சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கவேண்டும்.
அதேபோன்று 'சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வழிகாட்டல்களின் பிரகாரம், இந்த நிபந்தனைகளுக்குப் பொருந்தக்கூடிய பொருட்கள், நிறுவனங்கள் மற்றும் நாடுகளை விடயதான அமைச்சர் அவ்வப்போது அறிவிக்கமுடியும்' என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிபந்தனைகள் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்குப் பொறுப்பாக சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செயற்படுவார் என்றும், அந்நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக உத்தரவுகளை அவர் பிறப்பிக்கலாம் என்றும் அவ்வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
