மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அடர்ந்த காட்டுப்குதியில், எடுப்பான இளஞ்சிவப்பு-ஆரஞ்சு நிற உதடுகளையும், கறுத்த முகத்தையும் கொண்ட விசித்திரமான குரங்கு இனம் ஒன்றை விஞ்ஞானிகள் புதிய உயிரினமாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 75 ஆண்டுகளில் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட 5-வது குரங்கு இனம் இதுவாகும்.
கொங்கோவின் மத்திய-கிழக்கு பகுதியில் உள்ள லோமாமி தேசிய பூங்காவின் அடர்ந்த வெப்பமண்டல காடுகளில், மிக உயரமான மரங்களின் உச்சியில் இக்குரங்குகள் வாழ்கின்றன.
கரிய நிற உடலமைப்பைக் கொண்ட இக்குரங்குகளின் முகத்தில், எடுப்பான இளஞ்சிவப்பு-ஆரஞ்சு நிற உதடுகள் மற்றும் கறுத்த முகம் ஆகியவை பிரதான அடையாளங்களாகும்.
வனவிலங்கு பாதுகாவலர்கள் முதன்முதலில் 2008 ஆம் ஆண்டில் இந்த விசித்திரமான குரங்கைக் கண்டு ஒரு மங்கலான புகைப்படத்தை எடுத்தனர்.
10 ஆண்டுகளுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டில் இக்குரங்கு மீண்டும் தென்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று இதனைத் தீவிரமாகத் தேட ஆரம்பித்தது.
புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட மாணவர் ஜூனியர் அம்போகோ தலைமையிலான குழுவினர், குரங்குகளின் குரல் பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் விரிவான மரபணு ஆய்வுகள் மூலம் இது ஒரு புதிய இனம் என்பதை உறுதிப்படுத்தி, 'PLoS One' அறிவியல் சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வகை குரங்குகள் காடுகளில் வாழ்வது அப்பகுதி உள்ளூர் மக்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததுடன், அவர்கள் இதனை 'லிக்வேலி' என்றே அழைத்து வந்துள்ளனர்.
இக்குரங்குகள் மிகவும் வெட்கப்படும் குணம் கொண்டவை என்பதால், மரங்களின் உச்சியிலேயே ஒளிந்து வாழ்கின்றன. இதனால் காட்டைச் சுற்றியுள்ள 52 கிராமங்களில் வெறும் 8 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இக்குரங்குகளை நேரில் பார்த்துள்ளனர்.
இக்குரங்குகள் எழுப்பும் உரத்த "கர்ஜனை" போன்ற குரல் மிகவும் தனித்துவமானது. "அவற்றின் சத்தம் அடிக்கடி கேட்குமே தவிர, அவற்றைப் பார்ப்பது மிகக் கடினம்" என ஆய்வாளர் அம்போகோ தெரிவித்துள்ளார்.
கொங்கோ நாட்டின் இயற்கை வளச் செழுமையைப் போற்றும் வகையில், இந்த விலங்கிற்கு 'கொலோபஸ் கொங்கோயென்சிஸ்' என லத்தீன் மொழியில் அறிவியல் பெயரிடப்பட்டுள்ளது.
இது 'கொலோபஸ்' குரங்கு குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இக்குடும்பக் குரங்குகளுக்குப் பெருவிரல் இருக்காது.
தாவரங்களை மட்டுமே உண்ணும் இக்குரங்குகள், காடுகளின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும், விதைகளைப் பரப்புவதிலும், காடுகள் உருவாவதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசித்திரமான குரங்குகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. தற்போது இது ஒரு தனித்துவமான இனம் என்று உத்தியோகபூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், இதற்குச் சட்டப்பூர்வ வனவிலங்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
