கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறித்து பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தன. இதற்கமைய, நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் திவுலபிட்டிய பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடமிருந்து 31 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், அவரிடமிருந்து பொலிஸ் உத்தியோகத்தரிடம் கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கியும், அவர் தப்பிச் செல்லப் பயன்படுத்திய திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சிவில் பாதுகாப்புப் படையின் கட்டுநாயக்க நகரப் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்டு சிவில் பாதுகாப்புப் படையில் சேவை புரிந்த ஒருவர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், சந்தேகநபரின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் மினுவாங்கொடை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
