(க.சிவலிங்கமூர்த்தி)
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, அவற்றை தனியார்மயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சமூகத்தில் பரப்பப்பட்டு வரும் பிரசாரங்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில் அமைச்சில் புதன்கிழமை (15) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் ஊழியர் சேமலாப நிதியத்தின் மொத்தப் பெறுமதி 2025 டிசம்பர் 31ஆம் திகதியாகும் போது 4,943 பில்லியன் ரூபாவாகும். அதேபோன்று, 1980ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் 664 பில்லியன் ரூபா சொத்துக்கள் காணப்படுகின்றன. இந்த இரு நிதியங்களினதும் தற்போதைய உண்மை நிலைவரம் இதுவேயாகும்.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவைப் பத்திரத்தின் பிரதான நோக்கம், இந்த நிதியங்களின் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் அதிகரித்து, மக்களுக்கு மிகவும் திறமையான சேவைகளை வழங்குவதேயாகும். நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி இந்த நிர்வாகப் பணிகளை மேம்படுத்துவதற்கே முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் உறுப்பினர்களுக்கு முழுமையான சட்ட ரீதியான மற்றும் நிதி ரீதியான பாதுகாப்பு நூறு வீதம் உறுதிப்படுத்தப்படும்.
இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ள முதலாவது விடயம், ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் நலன்புரிப் பணிகளையும் அதன் தற்போதைய நிர்வாகத்தையும் மேலும் விரிவுபடுத்தி திறமையானதாக்குவதாகும். இரண்டாவது விடயம், ஊழியர் சேமலாப நிதியத்தின் நிர்வாகப் பணிகள் தொடர்பானது. தற்போது ஊழியர் சேமலாப நிதியத்தின் நிர்வாகப் பணிகளை மத்திய வங்கியும் தொழில் திணைக்களமும் தனித்தனியாக மேற்கொண்டு வருகின்றன. இந்த இரு நிறுவனங்களினதும் நிர்வாகப் பணிகளை ஒன்றிணைத்து மிகவும் சீரான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதே அந்த முன்மொழிவாகும்.
ஆனால், இந்த நிர்வாக ஒருங்கிணைப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு, இரு நிதியங்களையும் ஒன்றாக இணைத்து தனியார் துறைக்கு வழங்கப் போவதாக சமூகத்தில் தவறான பிரசாரம் ஒன்று பரப்பப்பட்டுள்ளது. தொழில் திணைக்களத்துக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான நிர்வாக ரீதியான ஒருங்கிணைப்பைத் தவிர, நிதியங்களை இணைக்கும் எவ்வித திட்டமும் இங்கு இல்லை.
இந்த இரு முன்மொழிவுகளையும் செயல்படுத்துவது தொடர்பில் அனைத்துத் தரப்பினரினதும் கருத்துக்களைப் பெற்று, விரிவான ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு 4 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை செயலாளர்கள் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடலை முன்னெடுத்த பின்னரே இறுதி முடிவுகள் எடுக்கப்படும். எனவே, ஊழியர்களின் வியர்வை மற்றும் கண்ணீர் சிந்தி சேமிக்கப்பட்ட இந்த சொத்துக்கள் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை உருவாக்கி சமூகத்தில் குழப்பங்களை விளைவிக்க வேண்டாம் என்றார்.
