(செ.கவிஷனா)
2026ஆம் ஆண்டுக்கான க.பொ.ச (சாதாரண தர) பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாத தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது பாதுகாவலரின் அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி பரீட்சைக்குப் பதிவு செய்ய முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
புதன்கிழமை (15) விசேட அறிவித்தல் ஒன்றைப் விடுத்துள்ள திணைக்களம், பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவுறுத்தல் கோவையொன்று ஏற்கனவே அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான க.பொ.ச (சாதாரண தர) பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் கோரப்படும் பணிகள் ஜூலை மாதம் 23ஆம் திகதி வரை நடைபெறும் எனப் பரீட்சைகள் திணைக்களம் கடந்த ஜூலை 3ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பில் சுட்டிக்காட்டியிருந்தது.
அதன்படி, விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதி வரையில் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாத பாடசாலை விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பாடசாலை அதிபர்களுக்குப் போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது பெற்றோரின் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பரீட்சைக்குப் பதிவு செய்து, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். எனவே, இதுவரை அடையாள அட்டை கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு இது ஒரு தடையாக அமையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அனைத்து விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கான விசேட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், எக்காரணத்தை கொண்டும் விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக ஏதேனும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள, பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தினூடாகவும் அல்லது 0112-784537, 0112-786616, 0112-784208 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் 0112-784422 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
