(எம்.ஆர்.எம்.வசீம்)
2050-ஆம் ஆண்டளவில் உலகின் பொருளாதார மையமாக ஆசியா மாறப்போகும் சூழலில், இலங்கை தனது பொருளாதாரத்தை முறையாகக் கட்டமைக்கத் தவறினால் எதிர்காலத்தில் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். பொருளாதார வளர்ச்சி மற்றும் கடன் மீள்செலுத்தலே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேசிய இளைஞர் முன்னணியின் 'ஸ்மாட் யூஎன்பி' பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'ரணிலுடன் வாசிப்போம்' இளைஞர் கலந்துரையாடல் நிகழ்வு கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் புதன்கிழமை (15) மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாம் 2022 இல் ஒரு நெருக்கடியைச் சந்தித்தோம், அதை நாம் சிறப்பாகக் கையாண்டிருக்க வேண்டும். நெருக்கடியைத் தீர்த்து ஸ்திரப்படுத்தியுள்ளோம். சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டமையே நாட்டின் உற்பத்தியை மீண்டும் தொடங்கி பொருளாதாரம் மீளக் கட்டமைக்கப்படக் காரணமாக அமைந்தது. எனினும் என்னைத் சர்வாதிகாரி என்று அழைத்ததைத் தவிர, அனைவரும் பயனடைந்தனர். நாம் இப்போது கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். 2028 வரை நமக்கு அவகாசம் உள்ளது, 2030 அளவில் நாம் 5-6 பில்லியன் டாெலர் வரை முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்போம். நாம் கடன் வாங்கினால், அது கடன் சுமையையே கூட்டும். இதுதான் நாம் இன்று எதிர்கொள்ளும் முக்கிய சவாலாகும். இதற்கு ஒரே தீர்வு துரிதமான பொருளாதார வளர்ச்சி மாத்திரமாகும்.
நாட்டின் தனிநபர் வருமானம் குறைந்து வருகிறது. ஆசியப் பிராந்தியத்தில் உள்ள பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் துரித வளர்ச்சியை நோக்கி நகர்கின்றன. 2050 இல் உலகின் பெரும் பொருளாதார சக்திகளாக அவை உருவெடுக்கும். 1976இல் நம்மை விட ஏழையாக இருந்த வங்காளதேசம், இன்று நம்மை முந்திச் செல்கிறது. நாம் விரிவடையத் தவறினால், எமது எதிர்கால சந்ததியினர் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு பெரும் சிரமப்பட நேரிடும்..
இலங்கையில் கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளாக பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது, வயதானவர்களின் எண்ணிக்கை கூடுகிறது. 25 ஆண்டுகளில், ஒரு சிறிய உழைக்கும் தளத்தை வைத்துக்கொண்டு, முதியவர்களின் மக்கள் தொகையை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.இலங்கையின் பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் வயதானவர்களின் மக்கள் தொகையை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஒட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தையை மாற்றியமைக்கும். இயற்கை நுண்ணறிவு மற்றும் ஒட்டோமேஷன் பிரச்சினை, சிலருக்கு வேலைவாய்ப்பை இழக்கச் செய்யும், மற்றவர்களுக்கு வேலை கிடைக்கும். அதற்கேற்ப இலங்கை தொழிற்சந்தையைத் தயார்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இலங்கையின் பொருளாதார மீட்பில் இந்தியா, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அமெரிக்காவின் பங்களிப்பு மிக முக்கியமானது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மட்டும் போதாது. பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் வலுவான உறவைப் பேணுவது நாட்டின் இருப்புக்கு மிக அவசியமாகும்.
இறுதியாக, இலங்கை தனது புவியியல் அமைவிடத்தைப் பயன்படுத்தி, வங்காள விரிகுடா பிராந்தியத்தில் உருவாகி வரும் புதிய பொருளாதார வழித்தடங்களில் இணைந்து கொள்ளவது அவசியமாகும் என்றார்.
