(க.சிவலிங்கமூர்த்தி)
தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து அமைக்க முயலும் புதிய கூட்டணியானது, நாட்டின் வரலாறு, அடையாளம் மற்றும் சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக திரைமறைவில் திட்டமிடப்பட்ட முறையில் அரங்கேறி வரும் பாரிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என தேசப்பிரேமி ஜாதிக பெரமுன அமைப்பின் சட்டத்தரணி நுவன் பெல்லன்துடாவ தெரிவித்தார்.
குறித்த அமைப்பின் காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது பல்வேறு தரப்பினர் தத்தமது உரிமைகளுக்காக ஆங்காங்கே தனித்தனியாகப் போராடி வருகின்றனர். எனினும், எமது நாட்டின் வரலாறு மற்றும் சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக ஒரு பாரிய தேச விரோத வேலைத்திட்டம் தீவிரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. நாட்டுப்பற்றாளர்களும் பௌத்த பிக்குகளும் ஒன்றிணைந்து, கூட்டாக இந்தச் சவாலை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
அண்மையில் இராசமாணிக்கம் சாணக்கியன், சுமந்திரன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் உள்ளிட்டோர் இணைந்து உருவாக்க முயலும் புதிய அரசியல் கூட்டணியானது ஒரு அசுத்தமான கூட்டணியாகும். தங்களுக்குள் இனவாதம் இல்லை என அவர்கள் கூறினாலும், அவர்களின் ஊடக அறிக்கையே அவர்களின் இனவாத நோக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் பிரபாகரனின் பயங்கரவாதம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அவரின் துப்பாக்கி முனைக்கு முன்னால் மண்டியிட்டு, பேச்சாளர்களாகச் செயற்பட்ட இவர்கள், இன்று ஜனநாயகம் மற்றும் ஒற்றுமை பற்றிப் பேசுவது வேடிக்கையானது.
1974 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் அமிpர்தலிங்கம் என்பவரால் கொண்டுவரப்பட்ட 'தமிழ் பேசும் மக்கள்' என்ற கருத்தியலே, பின்னர் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எஃப் உள்ளிட்ட அனைத்து தமிழ் அமைப்புகளினதும் 'தமிழீழம்' என்ற போலி தாயகக் கோட்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்தது. இதன் ஊடாக, முஸ்லிம்களின் தனித்துவ அடையாளங்களை மறக்கடித்து, சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனி தாயகத்தை நிறுவ முயல்கின்றனர். இது 2009 மே 18 அன்று எமது நாட்டு இராணுவ வீரர்கள் தங்களின் உயிரைத் தியாகம் செய்து தோற்கடித்த அதே பிரிவினைவாதக் கொள்கையின் மறுவடிவமே ஆகும்.
முன்னர் அஷ்ரப் மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோரால் கொண்டுவரப்பட்ட தேசிய ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்துக்கான மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பின் நோக்கமும் இது போன்றதே. தமக்கு மத்திய மாகாணத்தில் மக்கள் ஆணை கிடைத்துள்ளதாகக் கூறும் ரவூப் ஹக்கீமிற்கு நாட்டைப் பிரிப்பதற்கான எந்த ஆணையும் கிடைக்கவில்லை. சமந்தூறையில் ஒரு தனி நிர்வாக வலயத்தை உருவாக்கவோ அல்லது 12 வயதுடைய முஸ்லிம் சிறுமிகளைப் பாலின வயதிலேயே திருமணம் செய்து வைப்பதற்கான காட்டுமிராண்டித்தனமான சட்டங்களை நிலைநிறுத்தவோ இவர்கள் முற்படுகின்றனர். எனவே, இங்கு தோற்றம் பெறுவது மற்றுமொரு இனவாதக் கூட்டணியாகும். சிங்கள பௌத்த நாகரிகத்தையும், நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
