இலங்கைச் சமூகத்தின் முக்கிய பங்குதாரர்களுடன் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியாக, இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரினோ (Ambassador Carmen Moreno) வியாழக்கிழமை (16) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை செயல்முறைகளை வலுப்படுத்துவதில் சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள முக்கிய அமைப்புகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ச்சியாகக் கலந்துரையாடல்களையும் ஈடுபாடுகளையும் பேணி வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே இச்சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய சட்டக் கட்டமைப்பு, நீதித்துறை சுதந்திரம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
