நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (17) இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கோவிந்துபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை - சியம்பலாண்டுவ வீதியின் 8ஆம் கட்டை பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதே திசையில் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முயன்றபோது அதனுடன் மோதியுள்ளது. அதன் பின்னர், கட்டுப்பாட்டை இழந்த அந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த லொரியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். பின் இருக்கையில் பயணித்தவர் மேலதிக சிகிச்சைக்காக சிரிகல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் சியம்பலாண்டுவ, கந்தஉடபங்குவ பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்துடன் தொடர்புடைய லொரியின் சாரதியும், மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை வீதியின் மயிலம்பாவெளி பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் தவறி விழுந்து, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த ஓட்டுநர்கள் மற்றும் பின் இருக்கை பயணிகள் உட்பட நால்வர் காயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
அதேநேரம், பெந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி - கொழும்பு பிரதான வீதியின் பெந்தோட்டை நகருக்கு அருகில் லொரியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு நோக்கி பயணித்த லொரி ஒன்று வீதியின் வலது பக்கமாக திருப்ப முற்பட்டபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பின் இருக்கை பயணி மற்றும் லொரியின் சாரதி ஆகியோர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மஹாஇந்துருவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
மேலும், கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
ஏ-09 வீதியின் உமையாள்புரம் பகுதியில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 04
