யாழ்ப்பாணத்தில் இருந்து நாகப்பட்டினத்துக்கு தங்கக் கட்டிகளை விழுங்கிக் கடத்திச் செல்ல முற்பட்டவர்களில் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை தங்கக் கட்டிகளை தமது உடைமையில் வைத்திருந்த இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடமிருந்து தலா 100 கிராம் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
காங்கேசன்துறையில் இருந்து சிவகங்கை கப்பல் மூலம் நாகப்பட்டினத்துக்கு நேற்றைய தினம் புதன்கிழமை (17) செல்லவிருந்த கப்பலில் பயணிக்கத் தயாராகவிருந்த 146 பயணிகளில் சிலர் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்துள்ளனர்.
அவர்களை சோதனைக்கு உட்படுத்தியபோது இந்திய பிரஜைகள் இருவரின் உடைமையில் இருந்து தலா 100 கிராம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. அதனையடுத்து அவர்கள் இருவரையும் சுங்க பிரிவினர் கைது செய்தனர்.
அத்துடன் பயணிகளில் மேலும் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்த 9 இலங்கையர்கள் மற்றும் 17 இந்தியர்கள் என 26 பேரை சுங்க பிரிவினர் கைது செய்தனர்.
அதனையடுத்து, தங்கக் கட்டிகளை உடைமையில் வைத்திருந்த இருவர் மற்றும் சந்தேகத்துக்கு இடமான 26 பேருமாக மொத்தம் 28 பயணிகள் தவிர்ந்த ஏனைய 118 பயணிகள் இந்தியாவை நோக்கி பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தங்கக் கட்டிகளை விழுங்கி கடத்த முற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் 26 பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி ஸ்கேனிங் செய்ய சுங்க திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதன் அடிப்படையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 26 பேரில் 17 பேரை பாதுகாப்பாக, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்து ஸ்கேனிங் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது 17 பேரில் இலங்கை பெண்கள் 2 பேர் மற்றும் இந்திய ஆண்கள் 4 பேர் என 6 பேர் தங்கக் கட்டிகளை விழுங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
விழுங்கப்பட்ட தங்கக் கட்டிகளை மீட்க வைத்தியசாலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 9 பேர் தொடர்பிலும் சுங்க திணைக்களம் அடுத்த கட்ட நடவடிக்கையினை எடுக்கவுள்ளது.
அதேவேளை, 26 பேரில் நேற்றைய தினம் 17 பேருக்கு ஸ்கேனிங் செய்யப்பட்ட நிலையில் ஏனைய 9 பேருக்கும் இன்றைய தினம் வியாழக்கிழமை (18) ஸ்கேனிங் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
