மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபால மாவத்தை பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று (17) புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
ஆடை விற்பனை நிலையத்தில் தீ பரவியமை தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மாத்தறை மாநகர சபையின் தீயணைப்புப் படைப் பிரிவினர் மற்றும் மாத்தறை முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பெரும் பிரயத்தனத்திற்குப் பின்னர், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
மேற்படி தீ விபத்தில் குறித்த ஆடை விற்பனை நிலையத்திற்கு அருகில் இருந்த மேலும் இரு வர்த்தக நிலையங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதுடன், தீ பரவலுக்கான காரணம் மற்றும் சேதம் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
