(எம்.ஆர்.எம்.வசீம்)
எவ்வாறான சவால்கள் வந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிடப்போவதில்லை. விசாரணைகளின்போது வெளிவந்த விடயங்களை அடிப்படையாக் கொண்டே சுரேஷ் சலே கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகிறார். விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அவரின் பொறுப்பு என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டவல தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே விசாரணை செய்யப்பட்டு வருவது தொடர்பில் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் சாதாரண விசாரணை ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அந்த விசாரணையின் பிரகாரமே குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அதனால் அந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அவரின் பொறுப்பு. என்றாலும் ஒரு சந்தர்ப்பத்தில் அவர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை நிராகரித்துள்ளார்.
இவ்வாறு சுரேஷ் சலே விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை நிராகரிக்கும்போது, அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு சிலர், புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னாலும் வேறு இடங்களிலும் முன்வந்திருந்தனர். என்றாலும் அவர்களுக்கு எதிராக பொதுமக்கள் முன்வந்து நீதியான விசாரணைக்கு இடமளிக்குமாறு தெரிவித்து இவர்களுக்கு எதிராக செயற்பட்டபோது, சலேவுக்கு ஆதரவளித்து வந்தவர்கள் தற்போது அவர்களின் போராட்டத்தை கைவிட்டுச் சென்றுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை நாங்கள் கண்டுபிடிப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம். அதன் பிரகாரமே தற்போது அது தொடர்பான விசாரணை நடத்தி, சுரேஷ் சலேயை கைது செய்திருக்கிறோம். அதனால் சுரேஷ் சலே இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதே அவர் செய்யவேண்டிய விடயமாகும்.
அத்துடன் அவருக்கு மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சலேயை விசேட வைத்திய நிபுணர்கள் 5 பேர் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். அதேபோன்று அவர் நீதிவான் முன்னிலையில் பல தடவைகள் ஆஜராக இருந்தார். அவ்வாறான எந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்ததில்லை.
என்றாலும் சலேக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்திருந்தார்கள். அவர்கள் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் நீதிமன்றத்தை அவமதித்ததாகவும் தெரிவித்து, தற்போது அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ அறிக்கையில் அவ்வாறு எந்த தகவலும் பதிவாகவில்லை என்பது உறுதியாகிறது. அதனால் எவ்வாறான சவால்கள் வந்தாலும் இந்த விசாரணை நடவடிக்கைகளை கைவிடப்போவதில்லை என்றார்.
