(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை ஆரம்பித்துள்ள நிலையில், அமெரிக்காவின் எப்.பி.ஐ. இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு, இலங்கையின் புலனாய்வு அமைப்புகளிடம் போதிய நிபுணத்துவம் இல்லாத காரணத்தினால், தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த விசாரணைக்கு இலங்கை அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 22 அன்று அப்போதைய பிரதமருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதும் இக்கோரிக்கை மீண்டும் முன்வைக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுச் சேவை உள்ளிட்ட இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து, எப்.பி.ஐ. அமைப்பானது தாக்குதல் குறித்த முழுமையான விசாரணையை மேற்கொண்டது.
பதிவு செய்யப்பட்ட அனைத்துத் தகவல்கள் மற்றும் திரட்டப்பட்ட சான்றுகளின் அடிப்படையில், எப்.பி.ஐ அமைப்பானது இலங்கை அரசாங்கத்திடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. இலங்கையின் அனைத்துத் தரப்பு அதிகாரிகளும் இதனை ஏற்றுக்கொண்டனர்.
2020 நவம்பர் 12 எப்.பி.ஐ இன் சிறப்பு முகவர் மெரிலி ஆர். கொட்வின், கலிபோர்னியாவின் மத்திய மாவட்டத்துக்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் 71 பக்கங்கள் கொண்ட சத்தியப் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.
இரண்டு வருட விசாரணைகளுக்குப் பிறகு, அதாவது 2020 டிசம்பர் 11 அன்று, லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
குற்றச்சாட்டில் பெயரிடப்பட்ட பிரதிவாதிகள் (மொஹமட் நௌபர், மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் மற்றும் அஹமட் மில்கான் ஹயாத்து மொஹமட்) உள்ளிட்ட தாக்குதலுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள், வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட காலப்பகுதியிலேயே இலங்கையில் விளக்கமறியலில் இருந்தனர்.
அமெரிக்க விசாரணைக்குத் தொடர்பான முழுமையான தகவல்களும் சான்றுகளும் எப்.பி.ஐ. அல்லது அமெரிக்க நீதித்துறையிடமே உள்ளன. தற்போதைய அரசாங்கம் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இந்தத் தகவல்களையும் சான்றுகளையும் பெறுவதற்காக அமெரிக்க அரசாங்கத்திடம் முறையான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா? அதற்கு கிடைத்த பதில் என்ன? அவ்வாறு செய்யப்படவில்லை எனில், அதற்கான காரணம் என்ன? இந்தத் தகவல்களும் சான்றுகளும் இலங்கையின் நீதிமன்ற அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
