(நமது நிருபர்)
அரச அனுசரணையுடன் நடத்தப்படவிருக்கும் அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா நிகழ்விற்கான ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்கமைப்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்த கலந்துரையாடலொன்று, அமரபுர மகா சங்க சபையின் பதிவாளர், பலபிட்டியே சிறிசீவலி நாயக்க தேரர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்றது.
அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா நிகழ்வு, எதிர்வரும் 2026 ஜூலை 09 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை 400க்கும் மேற்பட்ட இளம் பிக்குமார்களின் பங்கேற்புடன், களுத்துறை களுகங்கையில் அமைக்கப்பட்டுள்ள தூபி வளாகத்தில் நடைபெறவுள்ளது. அத்துடன், உபசம்பதா அரச நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் ஜூலை 09 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு களுத்துறை போதி வளாகத்திற்கு அருகில் நடைபெறவுள்ளது.
அமரபுர மகா நிகாயவில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த அரச உபசம்பதா நிகழ்வு, இம்முறை 9 வருடங்களின் பின்னரே நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , கடந்த ஜனவரி மாதம் 01 ஆம் திகதி அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க கரகொட உயன்கொட மைத்ரிமூர்த்தி மகாநாயக்க தேரரைச் சந்தித்து புத்தாண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட போது, மகாநாயக்க தேரர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா நிகழ்வை அரச அனுசரணையுடன் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.
இதற்கமைய, ஜனாதிபதி அலுவலகத்தின் பங்களிப்புடன், அரச நிறுவனங்கள், முப்படைகள், பொலிஸார் மற்றும் பல தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவது மற்றும் அதன் ஒழுங்கமைப்புப் பணிகள் குறித்து இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
ஸ்ரீ லங்கா அமரபுர மகா சங்க சபையின் பிரதி பதிவாளர் அகங்கம மைத்ரிமூர்த்தி தேரர், உதவி பதிவாளர் அம்பலாங்கொட சுமேதானந்த தேரர், நிதகஸ்கம கல்யாணசிறி தேரர், நொரகல்லே சோரத தேரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியாரச்சி, நந்தன பத்மகுமார ஆகியோரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, களுத்துறை மாவட்ட செயலாளர் எச். எம். எஸ். பி. ஹேரத், களுத்துறை நகரபிதா எஸ். எச். டி. என். சோமரத்ன, களுத்துறை பிரதேச சபையின் தலைவர் அநுர பிரசாத் பெரேரா, களுத்துறை பிரதேச செயலாளர் எம். ஏ. பி. ஜயகொடி, அமரபுர மகா சங்க சபையின் தலைவர் அஜித் த சொய்ஸா, பொருளாளர் தம்மிக சமரவிக்ரம மற்றும் அரச அதிகாரிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அமரபுர மகா சங்க சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
