கொழும்பு, கிராண்ட்பாஸ் சேதவத்தை களனி பாலத்துக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்தை களனி பாலத்துக்கு அருகில் நேற்று (17) புதன்கிழமை காலை சடலமொன்று கரை ஒதுங்கியிருப்பதாக பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க, 5 அடி 5 அங்குல உயரமுடைய ஒருவராவார். தலையில் சுமார் ஒரு அங்குல நீளத்துக்கு முடி வளர்ந்துள்ள நிலையில், மேலங்கி எதுவும் அணியாமல், நீல நிற காற்சட்டை மாத்திரம் அணிந்துள்ளார்.
நீதிவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. கிராண்ட்பாஸ் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
