உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது முறையான வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதன் முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கில் சில தரப்பினர் செயற்பட்டு வருவதாகவும், இதற்காக சமூக வலைத்தளங்கள் ஊடாக திட்டமிட்ட வகையில் போலியான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதாகவும் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.
மேலும், குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு பதவிகளை வழங்குமாறு கத்தோலிக்க திருச்சபை எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்த காலத்திலேயே சந்தேகநபரான இப்ராஹிம் விடுவிக்கப்பட்டதுடன், அவரது சகோதரரின் சொத்துக்களும் விடுவிக்கப்பட்டதாக அருட்தந்தை சிறில் காமினி குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான அல்லது முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுவது நீதிமன்றத்தை அவமதிப்பதற்கு ஒப்பானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தரப்பினர் அதற்கான ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை நாட முடியும் எனவும் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.
