(செ.சுபதர்ஷனி)
பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சதித்திட்டம் தீட்டியமை என்னும் குற்றச்சாட்டினை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மீளாய்வு மனு செவ்வாய்க்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
நீதிபதி அமல் ரணராஜா மற்றும் நீதிபதி கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மீளாய்வு மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான யோஷித்த ராஜபக்ஷ தரப்புக்கு சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ், "மேற்படி வழக்கில் எனது சேவைபெறுநரும், டெய்சி பொரஸ்ட் எனும் பெண்ணும் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர். எனினும் பின்னர் டெய்சி பொரஸ்ட் எனும் பெண் சட்டமா அதிபரால் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். அவ்வாறாயின், எனது சேவைப்பெறுநருக்கு எதிராக மாத்திரம் சதித்திட்டம் தீட்டியமை எனும் குற்றச்சாட்டை முன்னிருத்தி வழக்கை முன்னோக்கி கொண்டு செல்வது சட்டத்துக்கு எதிரானது" எனத் தெரிவித்தார்.
இதன்போது குறித்த மீளாய்வு மனுவில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சட்டமா அதிபருக்கு சார்பாக மன்றில் முன்னிலையான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஜனக்க பண்டார தெரிவிக்கையில், "தனி ஒருவருக்கு எதிராகவும் சதித்திட்டம் தீட்டியமை எனும் குற்றச்சாட்டை முன்னிருத்தி வழக்கை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்" என்றார். இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட இருதரப்பு சாட்சியங்களையும் கருத்தில் கொண்ட நீதிபதிகள் அமர்வு, இன்றைய தினம் (16) மேற்படி மீளாய்வு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டது.
2009 மார்ச் 31 ஆம் திகதிக்கும் 2013 டிசம்பர் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் சட்ட விரோதமாக சம்பாதித்த 59 மில்லியன் ரூபாவை 3 வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்பாக வைத்திருந்ததன் ஊடாக கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக குற்றம் சுமத்தி, சட்டமா அதிபரால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், டெய்சி பொரஸ்ட் விசாரணைகளை எதிர்கொள்ள அவரது உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
