(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் தொடர்பில் திலித் ஜயவீர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஸ்வர பண்டார, மஹிந்த பத்திரான மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் ஊடகங்கள் முன்னாள் தெரிவித்த கருத்துகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் திங்கட்கிழமை (15) கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் திங்கட்கிழமை (15) நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் இவ்விடயத்தினை தெரிவித்திருந்தது.
மேற்படி விடயம் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளன. பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 6 பேரும் உயிர்த ஞாயிறு பயங்கரவாத குண்டு தாக்குதல் விசாரணைக்கள் தொடர்பில் பொதுமக்களிடையே எதிர்ப்பினை தூன்டும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
கனம் நீதிவான் அவர்களே, இந்த விசாரணையுடன் தொடர்புடைய 14 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நீதிமன்றில் சமர்ப்பிக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுதாக்குதல் சம்பவம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளை திசைத்திருப்பும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும், இவ்வழக்கில் 3 ஆவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலே இம்மாதம் 5 ஆம் திகதி இரவு முதல் உணவை தவிர்த்து வருகிறனார்.
அதற்கமைய கடந்த 7 ஆம் திகதி அன்று சந்தேகநபரான சுரேஸ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது வரை சந்தேகநபர் கொழும்பு தேசியவைத்தியசாலையில் 42 ஆவது வார்ட்டில் 4 விசேட வைத்திய நிபுணர்களி்ன் கண்கானிப்பின் கீழ் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
இந்த 3 ஆம் சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காலப்பகுதியில், மேலே குறிப்பிடப்பட்ட குழுவினர் நீதிமன்றத்தின் செயற்பாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி, சந்தேகம் மற்றும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். இதன் மூலம் நீதிமன்றத்துக்கு எதிராக பொதுமக்களின் எதிர்ப்பை உருவாக்குவதற்கு அவர்கள் முயன்றுள்ளனர். இவர்களது இச்செயற்பாடுகள் விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அதற்கமைய, 2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்றம், தீர்ப்பு அல்லது நிறுவனத்தை அவமதித்தல் சட்டத்தின் பிரகாரம் திலித் ஜயவீர, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, சுஜீஸ்வர பண்டார, மஹிந்த பத்திரண மற்றும் அசங்க நவரத்ன ஆகியோருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர்.
மேலும் கனம் நீதிவான் அவர்களே, குறித்த நபர்கள் பல்வேறு ஊடக நிறுவனங்கள் வாயிலாக விசாரணைகள் குறித்து வெளியிட்ட அவதூறான கருத்துக்கள் அனைத்தும் இந்த அறிக்கையில் தெளிவாக உள்ளடக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய சுஜீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண ஆகியோர் இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் முகநூல் ஊடாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வெளியிட்ட கருத்துக்களும் இதில் உள்ளடங்குகியுள்ளன.
எனவே, இவர்களுக்கெதிரான விசாரணைகளை நிறைவு செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு ஜூலை 1 ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதால், அன்றைய தினம் இவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்குமாறும் அதிகாரிகள் நீதிமன்றத்தி்ல் கோரிக்ளை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
அத்துடன், இந்த விசாரணைகளுக்காக குறித்த கருத்துக்கள் ஒளிபரப்பப்பட்ட 8 இலத்திரனியல் ஊடகங்களின் திருத்தப்படாத காணொளிகளைப் பெற்றுக்கொள்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறும், குற்றவியல் நடைமுறைக்கோவையின் 124 ஆம் பிரிவின் கீழ் அக்காணொளிகளைப் பதிவு செய்த கமரா தொழில்நுட்பக் கலைஞர்கள், செய்தி அறிவிப்பாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள் உள்ளிட்டோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அனுமதி வழங்குமாறும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான், ஊடகக் காணொளிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்குமான உத்தரவுகளைப் பிறப்பித்தார். எனினும், அடுத்த வழக்குத் தவணையில் திலித் ஜயவீர உள்ளிட்ட 6 பேரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கமாறு அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை நீதிவான் நிராகரித்து இருந்தார்.
இன்றைய தினம் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாத்திரமே நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட விதிகளின்படி இந்த நபர்களை கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றும் நீதிவான் சுட்டிக்காட்டினார். ஆகையால் விசாரணைகளின் இறுதியில் 2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யுமாறும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் நீதிவான் குறிப்பிட்டார்.
இதேவேளை, சந்தேகநபரான சுரேஷ் சலேயைப் பார்வையிடுவதற்கு நீதிவான் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும் என விசாரணை அதிகாரிகள் இதன்போது கோரினர். அதற்குப் பதிலளித்த நீதிவான், சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருக்கும் பட்சத்தில், அவரைப் பார்வையிடும் நடவடிக்கை மாளிகாகந்த நீதிவானினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். இதன்படி, சந்தேகநபரை ஜூன் 20 ஆம் திகதிக்கு முன்னர் மாளிகாகந்த நீதிவான் பார்வையிடுவதற்கான அறிவித்தலை வழங்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கு மீண்டும் ஜூலை 1 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
