(நா.தனுஜா)
இலங்கை மத்திய வங்கி தங்கக் கடன்களுக்கான விதிகளை இறுக்கமாக்கியிருப்பதனால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது ஏற்படும் தாக்கங்கள் பெரும்பாலும் கையாளக்கூடிய அளவிலேயே இருக்கும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் தங்கத்தால் பிணையுறுதி அளிக்கப்பட்ட கடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்சம் 70 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்ச வரம்பு 10 சதவீதத்தினால் இறுக்கமாக்கப்பட்டுள்ளது.
அதன்விளைவாக ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் இப்புதிய விதிகள் காரணமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது ஏற்படும் தாக்கங்கள் பெரும்பாலும் கையாளக்கூடிய அளவிலேயே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தங்கக் கடன்களுக்கான தேவைப்பாடு குறைவாக இருப்பதனால், வங்கிகள் மீதான தாக்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கும். எனினும் நிதி நிறுவனங்கள் ஒப்பீட்டளவில் வெகுவாகப் பாதிக்கப்படும்' என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் வங்கிகளில் மூலதன விகிதங்களில் சிறியளவிலான தாக்கமே ஏற்படும் என்றும், நிதி நிறுவனங்களின் மூலதன விகிதத்தில் ஓரளவு பெரிய வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்றாலும், அது கையாளக்கூடிய மட்டத்திலேயே இருக்கும் என்றும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
