சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிங்ஹாய் மாகாணத்தின் ஹைசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (16) 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. பெய்ஜிங் நேரப்படி மாலை 5.06 மணியளவில் அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சொத்து சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், பாதிப்பு நிலைமைகளை மதிப்பிடும் பணிகளில் உள்ளூர் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், பிரதான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 5 ரிக்டர் அளவிலான பல தொடர் அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
