(எம்.மனோசித்ரா)
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அடுத்த வாரம் கொழும்பு திரும்பியதும் அவரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ள, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் ஒரு முதன்மை விடயமாகக் கருதி அவசர விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நீதி அமைச்சருக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ள நீதித்துறை, அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் சிறைச்சாலைகள் நிர்வாகம் ஆகிய அனைத்து முக்கிய விடயங்களிலும் அவர் முழுமையாகத் தோல்வியடைந்துள்ளார்.
கடந்த இரண்டு வருட காலப்பகுதியில், சட்டமா அதிபர் திணைக்களத்தையோ அல்லது அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தையோ மறுசீரமைக்க அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறிப்பாக, அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஒரு மாதிரியைப் பரிசோதித்து முடிப்பதற்கு ஒன்றரை வருடங்கள் வரை காலம் எடுக்கிறது. இதன் காரணமாக சுமார் பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.
இந்தத் தாமதத்தினால், சட்டப்படி பிணை பெற தகுதியுடைய சுமார் பதினைந்தாயிரம் பேர் தேவையற்ற முறையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான சட்டச் சீர்திருத்த வரைவுகள் சில மாதங்களுக்கு முன்பே தயாரித்து முடிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க அமைச்சர் தவறிவிட்டார்.
அதேபோல், சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போதும் அமைச்சர் மிகவும் பலவீனமாகவே செயற்பட்டார். சிறைச்சாலையில் ஏற்பட்ட முதலாவது கலவரத்தின் போது இருவர் உயிரிழந்து, 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதன் பின்னர் அங்கு இயல்பு நிலையை ஏற்படுத்தி, பாதுகாப்புப் படையினரதும் நீதிமன்றத்தினதும் உதவிகளைப் பெற்று நிலைமையைக் கட்டுப்படுத்த அமைச்சர் தவறியதன் விளைவாகவே இரண்டாவது கலவரம் வெடித்தது.
இந்த இரண்டாவது மோதலில் 10 அப்பாவி சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்ததோடு, பெருமளவிலான கைதிகளும் உயிரிழந்தனர். அண்மைக்காலத்தில் சிறைச்சாலைக்குள் பதிவான மிக மோசமான உயிரழிவாகவும் சொத்துச் சேதமாகவும் இது அமைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையே மரணங்கள் பதிவாகி பாரதூரமான சூழ்நிலை ஏற்பட்ட போதும், திங்கட்கிழமை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைச்சர் அசமந்தப் போக்கிலேயே இருந்தார். இந்த ஒட்டுமொத்தப் பேரழிவிற்கும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவே பொறுப்பேற்க வேண்டும்.
இதன் காரணமாகவே, நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளன. இந்த வாரத்தில் சபாநாயகர் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை என்பதால் இதனை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
எனினும், அடுத்த வாரம் அவர் கொழும்பு வந்தவுடன் இப்பிரேரணையை ஒப்படைத்து, இதனை ஒரு முதன்மை விடயமாகக் கருதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரவுள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகநபர்கள், சட்டத்தரணிகள் என அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சியாக நாம் இக்கடமையை முன்னெடுக்கின்றோம் என்றார்.
