(எம்.ஆர்.எம்.வசீம்)
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் ஊழியர்களுக்கு ஒரு சதமேனும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க தவறிய அரசாங்கம், தற்போது ஊழியர்களுக்கு நன்மை பெற்றுக்கொடுப்பதற்கு இந்த நிதியத்தில் திருத்தம் மேற்கொள்ளப்போவதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. மாறாக, இந்த நிதியத்தில் இருக்கும் ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சித்து வருகிறது என ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பட்டாளர் ஆனந்த பாலித்த தெரிவித்தார்.
ஈ.பி.எப். ஈ.ரீ.எப். ஆகிய இரண்டு நிதியங்களையும் பொதுவானதொரு பொறிமுறைக்கு கொண்டுவர அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (17) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் எந்தவித உண்மமையான நோக்கமும் இல்லாமலே அதில் திருத்தம் மேற்கொள்ளப்போகிறது. இந்த நிதியங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் அதனால் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் நிதி பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
உண்மையில் இந்த இரண்டு நிதியங்களின் உரிமையாளர்கள் ஊழியர்களாகும். அவர்களுக்கு இந்த நிதியங்களின் நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கோ அல்லது வேறு ஏதாவது சிக்கல்கள் இருப்பதை அரசாங்கம் இனங்கண்டிருந்தால் அதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
அதேநேரம் தொழிலாளர்களின் அரசாங்கம் என்று தெரிவித்துக்கொண்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஊழியர் சேமலாப நிதியத்தின் வரப்பிரசாதங்களை குறைப்பதற்கு எதிராக எங்களுடன் இணைந்து போராட்டம் மேற்கொண்டவர்களே தற்போது ஆட்சியில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அதிகாரத்துக்கு வந்து, ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. நூற்றுக்கு 9 வீத வட்டி வீதமே இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. அதனை அதிகரிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோன்று ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தொழில் வழங்குநரால் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துக்கு வழங்கப்படும் நூற்றுக்கு 3 வீத கொடுப்பனவு, ஒரு சதமேனும் அதிகரிப்பதற்கு, இந்த அரசாங்கத்தால் முடியாமல் போயிருக்கிறது. அரசாங்கத்துக்கு தொழிலாளர்கள் மீது உண்மையான ஆதரவு இருக்குமானால் இதனை அரசாங்கம் செய்திருக்கும். அதனால் அரசாங்கம் தற்போது ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் திருத்தம் மேற்கொள்ளப்போவது ஊழியர்கள் மீதான உண்மையான அக்கறையில் அல்ல.
மேலும் 2011ஆம் ஆண்டு அப்போது இருந்த அரசாங்கம் ஓய்வூதியத்தில் குறைப்பு மேற்கொள்ள எடுத்த நடவடிக்கைக்கு எதிராக கட்டுநாயக்க ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் வீதிக்கிறங்கி போராட்டம் மேற்கொண்டார்கள். அந்த போராட்டம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ரொஷான் சானக்க என்ற ஊழியர் கொல்லப்பட்டார். அதேபோன்றதொரு நடவடிக்கையையே அரசாங்கம் தற்போது ஈ.பி.எப். ஈ.ரீ.எப் விடயத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இது பாரிய கொள்ளையாகும்.
அரசாங்கம் இந்த இரண்டு நிதியங்களையும் ஒன்றிணைத்து, பொதுவானதொரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து, அந்த நிதியத்தின் பணத்தை பயன்படுத்திக்கொண்டு உள்நாட்டு கடன்களை அடைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 23 மாதங்கள் கடந்துள்ளபோதும் இந்த நிதியங்களின் சட்ட திட்டங்களை பலப்படுத்தி, ஊழியர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் ஈ.பி.எப். ஈ.ரீ.எப் நிதியத்தில் திருத்தம் மேற்கொண்டு ஊழியர்களுக்கு நன்மை பயக்கப்போவதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. அதனால் ஈ.பி.எப். ஈ.ரீ.எப் நிதியத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் இதில் திருத்தம் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்து வருகிறது. அரசாங்கத்தின் இந்த யோசனைக்கு நாங்கள் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை என்றார்.
